பிரதமர் மோடியை சந்திக்க செப்.25-ல் டெல்லி செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: பிரதமர் மோடியை சந்திப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் வரும் 25-ம் தேதி டெல்லி செல்ல உள்ளார்.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின்கீழ் வழங்க வேண்டிய நிதியை, மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இந்த நிதியை உடனே விடுவிக்குமாறு மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. தேசிய கல்விக் கொள்கையை ஏற்று, பிஎம் பள்ளிகள் திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் மட்டுமே நிதியை விடுவிக்க முடியும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

அதேபோல, சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்துக்கான மொத்த செலவான ரூ.63,246 கோடியில், மாநில அரசின் பங்கு ரூ.22,228 கோடி, மத்திய அரசின் பங்கு ரூ.7,425 கோடி. எஞ்சிய நிதி ரூ.33,593 கோடியை வெளிநாட்டு நிதி நிறுவனங்களிடம் இருந்து கடனாக பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசின் பங்கு நிதியை விடுவிக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில், அமெரிக்காவில் இருந்து கடந்த 14-ம் தேதி சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின், ‘‘மெட்ரோ ரயில் திட்ட நிதி தொடர்பாக பிரதமரை நிச்சயம் சந்திப்பேன். பள்ளிக்கல்வியில் புதிய கல்விக் கொள்கையை ஏற்பது குறித்து அமைச்சர்களை, அதிகாரிகள் சந்தித்து வருகின்றனர். இதுகுறித்து பிரதமரிடம் நேரம் கேட்டு, அவரை சந்தித்து வலியுறுத்த உள்ளேன்’’ என்றார்.

இதைத் தொடர்ந்து, பிரதமரை சந்திக்க, முதல்வர் தரப்பில் நேரம் கோரப்பட்டது. முதல்வர் நாளை டெல்லி செல்வதாகவும் கூறப்பட்டது. ஆனால், 21 முதல் 24-ம் தேதி வரை பிரதமர் வெளிநாடு பயணம் செல்வதால், 25-ம்தேதி நேரம் ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, வரும் 25-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்று பிரதமரை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.