திருப்பதி லட்டில் நெய்க்கு பதிலாக விலங்கு கொழுப்பு; ஜெகன் அரசுக்கு எதிராக சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றச்சாட்டு

அமராவதி,

ஆந்திர பிரதேச முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியின்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்பட்ட பிரசாதத்தில் கலப்படம் நடந்தது என பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளார்.

இதுபற்றி ஆந்திர பிரதேச மந்திரி நர லோகேஷ், அவருடைய தந்தையான முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பேசிய வீடியோ பதிவு ஒன்றை தன்னுடைய எக்ஸ் ஊடகத்தில் பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து அதில் அவர் வெளியிட்ட செய்தியில், திருமலையில் உள்ள கடவுள் ஏழுமலையான் கோவில் புனிதம் வாய்ந்த கோவில்.

இதற்கு முன் இருந்த ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் நிர்வாகத்தின்போது, திருப்பதியில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் நெய்க்கு பதிலாக விலங்கின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டது என அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

கோடிக்கணக்கான பக்தர்களின் மத உணர்வுகளை மதிக்க தெரியாத ஒய்.எஸ். ஜெகன் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை நினைத்து வெட்கப்படுகிறேன் என அந்த பதிவு தெரிவிக்கின்றது.

ஆந்திர பிரதேசத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில் தெலுங்கு தேசம், ஜனசேனா மற்றும் பா.ஜ.க. இணைந்து போட்டியிட்டு, 164 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதில், தெலுங்கு தேசம் கட்சி தனியாக 135 தொகுதிகளை கைப்பற்றி இருந்தது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 11 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.