மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் கடமைகளுக்காக 6750 அரச உத்தியோகத்தர்கள்

 மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை தேர்தல் கடமைகளுக்காகவும் வாக்கெண்ணும் பணிகளுக்காகவும் 6750 அரச உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமையில் ஈடுபடவுள்ளதாக மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் எம்.பி.எம்.சுபியான் தெரிவித்தார்.
 
இன்று (19) திகதி ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே  அவர் இவ்வாறு தெரிவித்தார். 
 
இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,
 
கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாந்தீவு வைத்தியசாலையில் இடம்பெற்று வந்த வாக்களிப்பு நிலையம் இம்முறை மட்டக்களப்பு புதூர் விக்னேஸ்வரா வித்தியாலய மண்டபம் இலக்கம் மூன்றில் வாக்களிப்பதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இது இலங்கையில் ஆகக் குறைந்த அதாவது இரண்டு பேர் வாக்களிப்பதற்கான வாக்களிப்பு நிலையமாகும்.
 
வாக்களிப்பதற்கான வாக்குப்பட்டிகள் நாளை வெள்ளிக்கிழமை காலை 7:00 மணி முதல் மட்டக்களப்பு தேர்தல் மத்திய நிலையமாக விளங்கும் மட்டக்களப்பு இந்து கல்லூரியில் இருந்து விநியோகிக்கப்படும்.
 
இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் கடமைகளுக்காகவும் வாக்கெண்ணும் பணிகளுக்காகவும் 6750 அரச உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமையில் ஈடுபட உள்ளனர்.
 
மாவட்டத்தில் மொத்தமாக 1514 பொலிசார் உள்ளிட்ட விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட உள்ளனர். இதுவரையிலும் வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்படாத வாக்காளர்கள் நேரடியாக தபால் நிலையங்களுக்கு சென்று வாக்காளர் அட்டையினை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
 
இதுவரையில் 52 முறைப்பாடுகள் தேர்தல் பிணக்குகளை தீர்க்கும் நிலையத்திற்கு கிடைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் இருக்கின்ற 14 பிரதேச செயலாளர் காரியாலயங்களிலும் இணைப்புக் காரியாலயங்கள் வெள்ளிக்கிழமை முதல் செயற்படும் எனவும் தெரிவித்தார்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.