IND vs BAN : முதல் டெஸ்டில் டக்அவுட் ஆன இளம் வீரர், இனி ஊருக்கு கிளம்ப வேண்டியது தான்..!

வங்கதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது.  டாஸ் வெற்றி பெற்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்ய இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஷ்வால் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆடினாலும் வங்கதேச அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. துல்லியமான லைனில் அந்த அணி வீரர்கள் பந்துவீசியதால் ரோகித் மற்றும் ஜெய்ஷ்வால் ஆகியோர் ரன்களை எடுக்க திணறினர். 

இந்திய அணி 14 ரன்கள் எடுத்திருந்தபோது ரோகித் சர்மா 6 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து களத்துக்கு வந்த சுப்மன் கில் 8 பந்துகள் ஆடியபோதும் ஒரு ரன் கூட எடுக்காமல் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து வந்த விராட் கோலி ஆறு ரன்கள் மட்டுமே எடுத்து விக்கெட்டை பறிகொடுக்க, இந்திய அணி சிக்கலில் சிக்கிக் கொண்டது. 34 ரன்களுக்குள் 3 முக்கிய விக்கெட்டை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தபோது ரிஷப் பந்த் மற்றும் யஷஸ்வி ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர். 96 ரன்களை இந்திய அணி எட்டியபோது 39 ரன்கள் எடுத்திருந்த ரிஷப் பந்த் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்.  கேஎல் ராகுல் நிலைத்து நின்று ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் 16 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார்.

ஒருமுனையில் இந்திய அணயின் விக்கெட்டுகளை விழுந்து கொண்டிருந்தபோதும் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த யஷஸ்வி ஜெய்ஷ்வால் அரைசதம் அடித்தார். அவர் 56 ரன்கள் எடுத்திருந்தபோது ரானா பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுக்க இந்திய அணி 144 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து மீண்டும் தடுமாறிக் கொண்டிருந்தது. பின்வரிசையில் களமிறங்கிய ஜடேஜா, அஸ்வின் சிறப்பாக பேட்டிங் ஆட இந்திய அணி 200 ரன்களை கடந்தது.

வங்கதேசம் அணியில் சிறப்பாக பந்துவீசிய ஹசன் மகமூத் 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் சுப்மன் கில் டக்அவுட்டானது தான். அவர் துலீப் டிராபி தொடரிலேயே மோசமாக தான் விளையாடினார். இருந்தபோதும் கில்லை வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்ட நிலையில், இப்போது சொதப்பியிருக்கிறார். 2வது இன்னிங்ஸில் சிறப்பாக ஆடவில்லை என்றால் அவர் நிச்சயம் இந்த தொடரிலேயே இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பது சிரமம் தான்.   

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.