ஊழியர் மரணம்: ஆரோக்கியமான பணிச்சூழலை ஏற்படுத்தும் வரை ஓயமாட்டேன் – எர்னஸ்ட் இந்தியா நிறுவனத் தலைவர் சூளுரை

புதுடெல்லி: சர்வதேச அளவில் முன்னணி தணிக்கை நிறுவனங்களில் ஒன்றாக எர்னஸ்ட் அண்ட் யங் (Ernst & Young- EY) நிறுவனம் விளங்குகிறது. இந்த நிறுவனத்தில் 26 வயதான அன்னா செபாஸ்டியன் பெராயில், தணிக்கையாளராக (ஆடிட்டர்) பணியாற்றி வந்தார். இந்த நிறுவனத்தில் கடந்த மார்ச் மாதம் பணியில் சேர்ந்த அன்னா செபாஸ்டியன், நான்கு மாதங்களே ஆன நிலையில், கடந்த ஜூலை 20-ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். பணிச்சுமை உண்டாக்கிய மன அழுத்தம் சார்ந்த உடல் சோர்வால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாகத் தெரியவந்தது.

இந்நிலையில் உயிரிழந்த அன்னாவின் தாய், அனிதா அகஸ்டீன், தனது மகளின் மரணத்துக்கு நிறுவனத்தின் பணிச்சுமையால் உண்டான மன அழுத்தமே காரணம் என குற்றம்சாட்டி, எர்னஸ்ட் அண்ட் யங் நிறுவன தலைவர் ராஜீவ் மேமானிக்கு கடிதம் எழுதிருந்தார். தனது மகளின் இறுதிச்சடங்கில் கூட இஒய் நிறுவனத்தில் இருந்து யாரும் பங்கேற்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் அதற்கு இஒய் நிறுவனத் தலைவர் ராஜீவ் மேமானி விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: இது போன்ற துயரமான நேரத்தில் நாங்கள் செய்ய வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்துள்ளோம். ஒரு தந்தையாக, அனிதா அகஸ்டினின் துயரத்தை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. அவர்களின் வாழ்க்கையில் வெற்றிடத்தை நிரப்ப முடியாது என்றாலும், குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளாமல் தவறிவிட்டதற்காக நான் உண்மையிலேயே வருந்துகிறேன்.

இது நமது கலாச்சாரத்துக்கு முற்றிலும் புறம்பானது. இதற்கு முன் இவ்வாறு நடந்ததில்லை; இவ்வாறு இனி ஒருபோதும் நடக்காது. இஒய் நிறுவனத்தில் ஆரோக்கியமான பணிச்சூழலை ஏற்படுத்தும் வரை நான் ஓயமாட்டேன். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார். அன்னா செபாஸ்டியனின் மரணத்தில் அவரது தாயார் தெரிவித்துள்ள புகார் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று மத்திய தொழிலாளர் துறை இணையமைச்சர் ஷோபா கரந்தாலஜே உறுதி அளித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.