வங்கதேசத்தை காப்பாற்றிய மேகம்… தள்ளிப்போன இந்தியாவின் வெற்றி – ரசிகர்களுக்கு புதிய அறிவிப்பு

India vs Bangladesh 1st Test: வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற இந்திய அணிக்கு 6 விக்கெட்டுகள் தேவை என்ற நிலையில், போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் சற்று முன்னதாகவே நிறுத்தப்பட்டது. இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் 45 நிமிடங்கள் மீதம் இருந்த நேரத்தில் போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டிக்கான 5 நாள்களுக்கான சீசன் டிக்கெட்டுகள் முதலில் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட்டன. அதன்பின் ஒரு நாளுக்கான டிக்கெட் விற்பனை மைதானத்தின் வெளியே டிக்கெட் கவுண்டர்கள் மூலம் தினமும் காலை 7 மணிமுதல் விற்பனை செய்யப்பட்டு வந்தன. தற்போது ஆட்டம் அதன் இறுதிக்கட்டத்தை நெருங்கும் வேளையில், நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் கூட்டம் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆன்லைன் மூலம் டிக்கெட்

இந்தச் சூழலில், தினந்தோறும் கவுண்டரில் வழங்கப்பட்டு வந்த ஒருநாளுக்கான டிக்கெட் விற்பனையை ஆன்லைனில் விற்பதற்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (TNCA) தற்போது முடிவெடுத்துள்ளது. அதாவது, இந்தியா – வங்கதேசம் டெஸ்ட் போட்டியின் நாளைய (செப். 22) நான்கு நாள் ஆட்டத்திற்கான டிக்கெட் ஆன்லைனில் இன்று மாலை 5.30 மணிக்கு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமையான இன்றே கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததாலும், போட்டியை முதலில் இருந்தே பார்க்க ரசிகர்கள் விரும்புவதை கணக்கில் வைத்தும் முழுமையாக ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்பனை செய்ய தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் இந்த முடிவை எடுத்திருக்கிறது.

இதில் மூன்று விலை வகைமைகளில் டிக்கெட் விற்பனை தொடங்கும். F, G, H Upper Stand-ன் டிக்கெட் 200 ரூபாய்க்கும், I, J, K Lower Stand-ன் டிக்கெட் 400 ரூபாய்க்கும், K, M, K Terrace டிக்கெட் 1000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நாளைய ஆட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்கும் என்பது நினைவுக்கூரத்தக்கது. இன்னும் இந்திய அணி வெற்றி பெற 6 விக்கெட்டுகளை கைப்பற்றினாலே போதும். அதேநேரத்தில், வங்கதேசம் அணி 6 விக்கெட்டுகளை கையில் வைத்து 357 ரன்களை அடிக்க வேண்டும் என்பதால் 99.9% நாளை மதியத்திற்குள் இந்திய அணி வெற்றி வாகை சூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது மதிய உணவு இடைவேளைக்கு முன்னரா, அல்லது பின்னரா என்பது அஸ்வின், ஜடேஜாவின் சுழல் ஜாலத்தில்தான் இருக்கிறது. 

அஸ்வின் அசத்தல்

வங்கதேச அணிக்கு 515 ரன்களை இந்தியா இலக்காக நிர்ணயித்தது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி பேட்டிங் தரப்பில் அதிகபட்சமாக சுப்மான் கில் 119 ரன்களையும், ரிஷப் பண்ட் 109 ரன்களையும் குவித்தனர். இந்தியா முதல் இன்னிங்ஸில் 376 ரன்களுக்கு ஆல்-அவுட்டான நிலையில், வங்கதேச அணி 149 ரன்களையே முதல் இன்னிங்ஸில் எடுத்தது. அதன்பின் நேற்று மாலை பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி இன்று மதிய உணவு இடைவேளைக்கு சிறிது நேரத்திற்கு பின்னர் 287/4 என்ற நிலையில் டிக்ளர் செய்தது.

தற்போது வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களை அடித்துள்ளது. கேப்டன் நஜ்முல் ஹேசைன் ஷாண்டோ 51 ரன்களுடனும், ஷகிப் அல் ஹாசன் 5 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். இந்திய அணியின் பந்துவீச்சு தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பும்ரா 1 விக்ககெட்டையும் வீழ்த்தி உள்ளனர். 

பொட்டலாம் கட்டுமா சுழல் கூட்டணி

தற்போது ஆடுகளம் மெதுவாகி, நன்கு தேய்மானம் அடைந்துவிட்டதால் சுழலுக்கு பெரிதாக கைக்கொடுக்கிறது. எனவே, சுழல் வித்தைக்காரர்களான இந்திரன்-சந்திரன் (ஜடேஜா – அஸ்வின்) நாளை வங்கதேசத்தை எவ்வளவு விரைவாக பொட்டலம் கட்டுவார்கள் என்பதை பார்க்க ரசிகர்கள் கார்த்திருக்கின்றனர். இருப்பினும், ஷாண்டோ, ஷகிப் அல் ஹாசன், லிட்டன் தாஸ், மெஹிதி ஹாசன் மிராஸ் உள்ளிட்டோர் பேட்டிங்கில் கடுமையாக போராடக்கூடியவர்கள் என்பதையும் நாம் மறக்கக் கூடாது. 

மேலும் படிக்க | வங்கதேசத்தை திணறடித்த ஆகாஷ் தீப், முகமது ஷமிக்கு இனி இடம் கேள்விக்குறி
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.