ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி கோரிய மனுக்கள் மீது பரிசீலித்து முடிவு: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோரிய மனுக்கள் மீது பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் என தமிழக அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜயதசமியை முன்னிட்டு வரும் அக்.6-ம் தேதியன்று அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்எஸ்எஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன், அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோரி ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அளித்த மனுக்களை பரிசீலி்த்து வருவதாகவும், வரும் செப்.29-க்குள் இது தொடர்பாக முடிவெடுக்கப்படும், என்றார்.

மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜி.கார்த்திகேயன், “ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி விதிமுறைகள் வகுக்கப்பட்ட பின்னரும் அணிவகுப்புக்கு அனுமதி வழங்கப்படவில்லை” என்றார். “ஒவ்வொரு வருடமும் ஒரே வழித்தடத்தில் தான் அணிவகுப்பு நடைபெறுகிறது. அதற்கான விதிமுறைகள் எல்லாம் வகுக்கப்பட்ட பின்னரும் அனுமதி வழங்குவதில் ஏன் தாமதம் ஏற்படுகிறது” என கேள்வி எழுப்பிய நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரணையை செப்.26-க்கு தள்ளி வைத்துள்ளார். அதற்கு முன்பாக ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோரிய விண்ணப்பங்களை பரிசீலித்து, எடுக்கப்பட்ட முடிவுகளை அறிக்கையாக தாக்கல் செய்யவும் போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.