இந்தியா – வங்காளதேசம் 2-வது டெஸ்ட்: 3-வது நாளும் மழை குறுக்கிட வாய்ப்பா..? வெளியான தகவல்

கான்பூர்,

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் சென்னையில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா- வங்காளதேசம் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்கிறது. அந்த அணி 35 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் அடித்திருந்தபோது போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து அங்கு மழை பெய்ததன் காரணமாக முதல் நாள் ஆட்டம் அதோடு ரத்து செய்யப்பட்டது. முஷ்பிகுர் ரஹிம் 6 ரன்களுடனும், மொமினுல் ஹக் 40 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா தரப்பில் ஆகாஷ் தீப் 2 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதனையடுத்து இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற இருந்தது .

ஆனால் கான்பூரில் மீண்டும் மழை பெய்து வருவதால் 2வது நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் முழுமையாக ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த போட்டியின் 3-வது நாளான நாளையும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கான்பூரில் நாளை 60% மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதனால் இப்போட்டி திட்டமிட்டபடி நடைபெறுவது கேள்விக்குறியாகியுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.