புனே மெட்ரோ ரெயில் சேவை: பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்

புனே,

பிரதமர் நரேந்திர மோடி கடந்த வியாழக்கிழமை மும்பை புனே சிவாஜிநகர் மாவட்ட கோர்ட்டு- ஸ்வர்கேட் வரையிலான சுரங்க மெட்ரோ ரெயில் பாதையை திறந்து வைக்கவும், மேலும் ரூ.22 ஆயிரத்து 600 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை துவங்கி வைக்கவும் திட்டமிட்டு இருந்தார். மேலும் பிரதமர் வருகைக்காக புனேயில் உள்ள எஸ்.பி. கல்லூரி மைதானத்தில் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்தநிலையில் புனேயில் பெய்த கனமழை காரணமாக இந்த பயணம் ரத்து செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ்(எஸ்.பி.) கட்சி தலைவர் சுப்ரியா சுலே, இந்த வழித்தடத்தை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைக்க வேண்டும் என்று பிரதமருக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அதுமட்டுமின்றி மகாவிகாஸ் அகாடி கூட்டணி கட்சிகளை சேர்ந்த காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்(எஸ்.பி) மற்றும் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சியினர் மெட்ரோ ரெயில் வழித்தடத்தை உடனடியாக திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சிவாஜிநகர் மாவட்ட கோர்ட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்தநிலையில் மத்திய மந்திரி முரளிதர் மொகோல் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், பிரதமர் நரேந்திர மோடி புனே மெட்ரோவின் சிவாஜிநகர் மாவட்ட கோர்ட்டு- ஸ்வர்கேட் பாதையை வருகிற 29-ந் தேதி (நாளை) திறந்து வைக்கிறார். மேலும் ஸ்வர்கேட்- கட்ராஜ் நீட்டிப்பு பாதைக்கும் அடிக்கல் நாட்டுகிறார் என அதில் கூறியுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.