திருப்பதி லட்டு பிரசாதத்தில் கலப்பட நெய்: ஆய்வை தொடங்கியது சிறப்பு விசாரணை குழு

திருமலை: திருப்பதி லட்டு பிரசாத கலப்பட நெய் விவகாரம் குறித்து சிறப்பு விசாரணை குழு தனது ஆய்வை நேற்று தொடங்கியது.

ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ஆட்சியில், திருப்பதி தேவஸ்தானத்துக்கு கலப்பட நெய் அனுப்பப்பட்டது குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழுவை ஆந்திர மாநில அரசுநியமித்தது. குண்டூர் ஐஜி சர்வாஷ் ரெஷ்த் திரிபாதி தலைமையில் 9 பேர் கொண்ட குழு நேற்று முதல் விசாரணையை தொடங்கியது.

இக்குழு நேற்று காலை திருப்பதி கிழக்கு போலீஸ் நிலையத்துக்கு சென்று, திண்டுக்கல் ஏஆர் டெய்ரி நிறுவனம் கலப்பட நெய் வழங்கியதாக தேவஸ்தானம் கொடுத்த புகாரை வாங்கி பரிசீலித்தது.

இதனை தொடர்ந்து பத்மாவதி விருந்தினர் மாளிகையில், நிர்வாக அதிகாரி சியாமள ராவுடன் கலந்தாலோசனை நடத்தியது. நெய் குறித்த டெண்டர்கள், நெய் வழங்கிய டெய்ரி நிறுவன விவரங்கள், ஏஆர் டெய்ரி குறித்த விவரங்கள், கடந்த ஆட்சியில் நெய் மற்றும் இதர பொருட்கள் வாங்கப்பட்ட விவரங்களை விசாரணை குழு சேகரிக்க உள்ளது. இக்குழு 3 நாட்கள் வரை திருப்பதியில் விசாரணை நடத்தி, அதன் பின்னர் திண்டுக்கல் ஏஆர் டெய்ரி நிறுவனத்திலும் விசாரணை நடத்த உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.