பேப் 4 பேட்ஸ்மேன்களில் விராட் கோலி தான் சிறந்தவர்.. ஆனால்.. – இந்திய முன்னாள் வீரர்

மும்பை,

நவீன கிரிக்கெட்டில் இந்தியாவின் விராட் கோலி, ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் சுமித், நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன், இங்கிலாந்தின் ஜோ ரூட் ஆகியோர் பேட்டிங்கில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். அதனால் அவர்களை பேப் 4 பேட்ஸ்மேன்கள் என்று ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் பாராட்டுவது வழக்கமாகும்.

ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியை விட மற்ற மூவரும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஜோ ரூட் உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்தி 12000 ரன்களை கடந்து சச்சினை நெருங்கி வருகிறார். அதனால் விராட் கோலியை விட ஜோ ரூட் தான் சிறந்த பேட்ஸ்மேன் என்ற பேச்சுக்கள் தற்போது காணப்படுகின்றன.

இந்நிலையில் பேப் 4 பேட்ஸ்மேன்களில் விராட் கோலி தான் சிறந்தவர் என்று இந்திய முன்னாள் வீரர் பார்த்தீவ் படேல் தெரிவித்துள்ளார். ஏனெனில் மற்ற மூவர்களை விட ஒவ்வொரு முறையும் களமிறங்கும் போது சதமடிப்பார் என்று எதிர்பார்க்கும் அளவுக்கு விராட் கோலி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார். ஆனால் அந்த அழுத்தத்தாலேயே விராட் கோலி சமீப காலங்களில் கொஞ்சம் தடுமாற்றமாக விளையாடி பின்தங்கியிருப்பதாகவும் பார்த்தீவ் படேல் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-“விராட் கோலி உணரும் அழுத்தத்தை சுமித் அல்லது ரூட் அல்லது வில்லியம்சன் ஆகியோர் சந்திப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஏனெனில் விராட் கோலி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பும் அழுத்தமும் இருக்கிறது. அதனால் விராட் கோலி 60 அல்லது 70 ரன்கள் அடித்தால் கூட அதை அனைவரும் தோல்வியாக பார்க்கிறார்கள். அந்தளவுக்கு விராட் கோலி தமக்கென்று தனித்துவமான தரத்தை உருவாக்கியுள்ளார். ஏனெனில் ஒவ்வொரு முறை அவர் களமிறங்கும் போதும் நாம் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கிறோம்.

எப்போதும் விராட் கோலி உச்சகட்ட ஆர்வத்துடன் விளையாடுவார் என்று நாம் எதிர்பார்க்கிறோம். இருப்பினும் அவரும் வயதாகி வருகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்போதும் விளையாடக்கூடிய விராட் கோலி அழுத்ததால் அசத்தவில்லை என்று நான் நினைக்கவில்லை. ஆனால் பெரிய தரத்தை நிர்ணயத்துள்ளதால் நாம் தான் அவரிடம் அதிகமாக எதிர்பார்க்கிறோம்” என்று கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.