இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்

ஜெருசலேம்: இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதலை தொடங்கியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் சைரன் ஒலி எழுப்பி பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு ராணுவம் அறிவுறுத்தியுள்ளது.

இஸ்ரேல் மீது எந்த நேரத்திலும் ஈரான் நேரடியாக ராணுவ தாக்குதல்களை தொடுக்க நேரிடலாம் என்று இன்று (அக்.01) அமெரிக்காவின் வெள்ளை மாளிகை எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த சூழலில் தற்போது இஸ்ரேல் மீதான ஏவுகணை தாக்குதலை ஈரான் தொடங்கியுள்ளதை இஸ்ரேல் ராணுவம் உறுதி செய்துள்ளது.

இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்தியில், “சைரன் ஒலிகள் கேட்டால் பொதுமக்கள் அந்த பகுதியை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்று அடுத்த அறிவிப்பு வரும் வரை அங்கேயே இருக்கவும்” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மீதான ஏவுகணை தாக்குதலை ஈரான் அரசு ஊடகமான ஐஆர்ஜிசி டிவியும் உறுதி செய்துள்ளது. காஸா, லெபனான் மீதான தொடர் தாக்குதல்கள், ஹிஸ்புல்லா தலைவர் கொல்லப்பட்டது உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு பதிலடியாக இந்த தாக்குதலை ஈரான் முன்னெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு மேலே ஏராளமான ஏவுகணைகள் பறந்து செல்லும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதனையடுத்து பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தும் பணிகளை இஸ்ரேல் அரசு முடுக்கி விட்டிருக்கிறது.

முன்னதாக இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்தாண்டு அக்டோபர் 7-ம்தேதி தாக்குதல் நடத்தினர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். 251 பேர் காசாவுக்கு பிணைக் கைதிகளாக கடத்தி செல்லப்பட்டனர். இதனால் காசாவில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகளை ஒழிக்க இஸ்ரேல் போர் தொடுத்தது. தற்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த தாக்குதலில், பாலஸ்தீனத்தின் காசா உள்ளிட்ட பகுதிகளில் 40,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து காசாவுக்கு ஆதரவாக இஸ்ரேலின் அண்டை நாடான லெபனானில் இருக்கும் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் ராக்கெட் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக லெபனானில் சில தினங்களுக்கு முன்பு ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் பயன்படுத்திய பேஜர்களும், வாக்கி டாக்கிகளும் வெடித்துச் சிதறின. இந்த தாக்குதலின் பின்னால் இஸ்ரேல் இருப்பதாக கூறப்பட்டது. இதன் பின்னர் இஸ்ரேல் தொடர்ந்து லெபனான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இஸ்ரேல் நடத்திய விமானப் படை தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்த சம்பவம் மத்திய கிழக்கில் பதற்றமான சூழலை உருவாக்கியது. தொடர்ந்து ஹிஸ்புல்லாக்களின் ட்ரோன் படைப் பிரிவு தலைவர் ஹுசைன் சிரோர், மற்றொரு உயர்மட்ட தளபதியான நபில் கவுக் ஆகியோரை அடுத்தடுத்து இஸ்ரேல் ராணுவம் கொன்றது.

லெபனான் மீதான தொடர் தாக்குதலை நிறுத்துமாறு ஐ.நா. தொடங்கி சர்வதேச அமைப்புகளும், உலக நாடுகளும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும் கூட லெபனான் மீது இஸ்ரேல் நேற்று தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் லெபனானில் 1000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலில் இந்த தொடர் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே ஈரான் ராணுவம் இஸ்ரேல் மீதான ஏவுகணை தாக்குதலை தொடங்கியிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.