துப்பாக்கியை துடைத்தபோது நிகழ்ந்த விபரீதம்; பாலிவுட் நடிகர் கோவிந்தா மருத்துவமனையில் அனுமதி!

பாலிவுட் நடிகர் கோவிந்தா மும்பை ஜுகு பகுதியில் தனி பங்களாவில் தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார். அவர் இன்று அதிகாலை கொல்கத்தாவில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றுக்கு செல்வதற்காக காலை 4 மணிக்கே எழுந்து தயாரானார். அவர் தன்னுடன் தனது ரிவால்வரையும் எடுத்துச் செல்ல முடிவு செய்தார். இதற்காக தனது துப்பாக்கியை காலை 4.45 மணிக்கு துடைத்துக்கொண்டிருந்தார். அந்நேரம் எதிர்பாராத விதமாக கைபட்டு துப்பாக்கி சுட்டுக்கொண்டது. இதில் தோட்டா கோவிந்தாவின் காலில் பட்டது. உடனே காயத்துடன் கோவிந்தா தனது வீட்டிற்கு அருகில் உள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சையளித்தனர். காலில் பாய்ந்த தோட்டாவை அப்புறப்படுத்தி சிகிச்சை கொடுத்துள்ளனர்.

இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. சம்பவம் குறித்து நடிகர் கோவிந்தாவின் குடும்பம் முறைப்படி தகவல் தெரிவிப்பார்கள் என்று டாக்டர்கள் தெரிவித்துவிட்டனர். சிகிச்சைக்குப் பிறகு வீட்டிற்கு சென்றுவிட்டார். இது குறித்து கோவிந்தா எந்த வித புகாரும் கொடுக்கவில்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். இது குறித்து கோவிந்தாவின் குடும்பத்தினர் கூறுகையில், ”காலை 6 மணிக்கு விமானத்தில் செல்வதாக இருந்தது. விமான நிலையத்திற்கு புறப்பட்டுக்கொண்டிருக்கும் போது துப்பாக்கியையும் எடுத்துச் செல்ல முடிவு செய்து, அதனை எடுத்து துடைத்த போது கைதவறி சுட்டுவிட்டது” என்று தெரிவித்தனர்.

60 வயதாகும் கோவிந்தா 1990களில் பிரபலமாக விளங்கினார். அதன் பிறகு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து எம்.பி.யானார். பின்னர் கடந்த மக்களவை தேர்தலுக்கு முன்பு மகாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் தன்னை இணைத்துக்கொண்டார். அதோடு மக்களவை தேர்தலில் பிரசாரமும் செய்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.