ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு வாய்ப்பளிக்காதது ஏன்…? கம்பீர் போடும் தனி கணக்கு – முழு பின்னணி இதோ

Ruturaj Gaikwad, India National Cricket Team: வங்கதேசம் இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளை இந்தியாவில் விளையாட உள்ளது. இன்றோடு டெஸ்ட் தொடர் நிறைவடைந்துவிட்டது. இந்திய அணி சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் 280 ரன்கள் வித்தியாசத்திலும், கான்பூரில் நடந்த இரண்டாவது டெஸ்டில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வைட் வாஷ் செய்து வங்கதேசத்தை வதம் செய்துள்ளது. 

அடுத்த டெஸ்ட் தொடர் வரும் அக்டோபர் 16ஆம் தேதிதான் தொடங்குகிறது. இந்திய மண்ணில் மூன்று டெஸ்ட் போட்டிகளை இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. இந்த போட்டிகளுக்கு இடையே சுமார் 2 வார காலம் இடைவெளி இருக்கும் நேரத்தில் இந்தியா – வங்கதேசம் அணிகள் டி20 தொடரில் மோத இருக்கின்றன. வரும் அக். 6, 9, 12 ஆகிய தேதிகளில் முறையே குவாலியர், டெல்லி, ஹைதராபாத் நகரில் நடைபெறுகின்றன. 

டி20 அணியில் ருதுராஜ் இல்லை…

இந்த தொடருக்கான இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளின் வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்திய அணி (Team India) தரப்பில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்படுகிறார். ஹர்திக் பாண்டியா இடம் பெற்றுள்ளார். மயங்க் அகர்வால், நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் முதன்முதலாக இந்திய அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். வருண் சக்ரவர்த்தி நீண்ட நாளுக்கு பின் இந்திய அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். இதில் இந்திய அணி பலமாக காணப்பட்டாலும், அபிஷேக் சர்மா மட்டுமே ஓப்பனராக உள்ளார் எனலாம். சஞ்சு சாம்சன் ஓப்பனிங்கில் விளையாடுவார் என்றாலும் அவர் தொடர்ந்து அந்த இடத்தில் விளையாடப்போவது கிடையாது என்பது மற்றொரு ஓப்பனரை இந்திய அணி இதில் எடுக்கவில்லை.

அதாவது டி20இல் ரோஹித் சர்மா ஓய்வுக்கு பிறகு யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மான் கில் ஆகியோர்தான் ஓப்பனர் ரேஸ்ஸில் முன்னணில் இருக்கின்றனர். அவர்கள் அடுத்த நியூசிலாந்து டெஸ்டில் விளையாட வேண்டும் என்பதால் இந்த டி20 தொடரில் சேர்க்கப்படவில்லை. இவர்கள் இல்லாதபட்சத்தில் ருதுராஜ் கெய்க்வாட் (Ruturaj Gaikwad) அல்லது இஷான் கிஷன் ஆகியோரை எடுத்திருக்கலாம். ஆனால் அவர்களையும் இந்திய அணிக்கு எடுக்கவில்லை. இதனால் பலரும் பிசிசிஐ மீது விமர்சனம் வைத்து வருகின்றனர். அதிலும் ருதுராஜ் கெய்க்வாட் டி20இல் சிறப்பாக விளையாடி வரும் சூழலில் அவரை அணியில் எடுக்காதது ரசிகர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. பிசிசிஐ அவருக்கு முறையாக வாய்ப்பளிக்க மறுக்கிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. 

பிசிசிஐ போடும் கணக்கும்

ஆனால், ருதுராஜை பிசிசிஐ இந்த டி20 தொடருக்கு எடுக்காததற்கான காரணம் குறித்து தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, நவம்பர் – டிசம்பர் – ஜனவரியில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் (Border Gavaskar Trophy 2024-25) இந்தியா விளையாடி உள்ளது. இந்த தொடரில் ருதுராஜ் கெய்க்வாட்டை ஓப்பனிங் வீரருக்கான பேக்அப்பாக எடுக்கவே ருதுராஜ் கெய்க்வாட்டை டி20 தொடருக்கு எடுக்காமல், உள்ளூர் தொடரில் கவனம் செலுத்தும்படி பிசிசிஐ அறிவுறுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. 

ருதுராஜ் கெய்க்வாட் தற்போது இரானி கோப்பை தொடரில் (Irani Cup 2024) ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கு கேப்டனாக செயல்படுகிறார். இவர் தலைமையில் துலீப் டிராபில் இந்திய C அணி இரண்டாம் இடத்தை பிடித்தது இங்கு குறிப்பிடத்தக்கது. தொடர் உள்ளூர் போட்டியில் கவனம் செலுத்துவதன் மூலம் அவரின் ஆட்டத்தை பார்த்து டெஸ்ட் அணியில் வாய்ப்பளிக்க பிசிசிஐ தயாராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஆஸ்திரேலிய தொடரில் பேக்அப் ஏன்?

ஏனெனில், இந்திய அணி மிடில் ஆர்டருக்கு பேக்அப் இருக்கிறது. சுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரேல் என பல வீரர்கள் இருக்கின்றனர். ரஹானே கூட நல்ல பார்மில்தான் இருக்கிறார். ஆனால், அதே நேரத்தில் ஓப்பனிங் பேட்டிங்கை பார்த்தால் இப்போதைக்கு ஜெய்ஸ்வால் – ரோஹித் சர்மா ஜோடியை தவிர்த்து வேறு தேர்ந்த வீரர்கள் யாருமில்லை. 

எனவே, இவர்களுக்கு பேக்அப் வீரராக ருதுராஜ் ஆஸ்திரேலியாவுக்கு பயணிக்கலாம் என கூறப்படுகிறது. கடந்த முறையே ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது பல வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. எனவே, ஒவ்வொரு இடத்திற்கும் பேக்அப் வீரர்கள் வேண்டும் என்பதால் ருதுராஜை தொடர்ந்து ரெட் பால் கிரிக்கெட்டிலேயே பிசிசிஐயும், கவனம் செலுத்த அறிவுறுத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முடிவின் பின்னணியில் ரோஹித் – கம்பீர் இணையும் இருக்க வாய்ப்புள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.