புதிய அரசியல் கட்சியை தொடங்கினார் பிரசாந்த் கிஷோர்..மதுக்கடைகள் திறக்கப்படும் என வாக்குறுதி

பாட்னா,

பீகாரை சேர்ந்தவர் பிரசாந்த் கிஷோர். இவர் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுக்கும் பணியை மேற்கொண்டு வந்தார். பாஜக, மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளுக்கு அவர் தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்தார்.

அதன்பிறகு கடந்த சில ஆண்டுகளாக பிரசாந்த் கிஷோர் தேர்தல் வியூக வகுப்பாளர் பணியை கைவிட்டார். அரசியலில் என்ட்ரி கொடுப்பதாக அறிவித்தார். மேலும் பீகாரை மையப்படுத்தி அரசியல் செய்ய உள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து ‘ஜன் சுராஜ்’ எனும் இயக்கத்தை தொடங்கி மாநிலம் முழுவதும் பிரசாந்த் கிஷோர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்தார்.

இந்தநிலையில், பீகார் மாநிலத்தில் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதைமுன்னிட்டு, பிரசாந்த் கிஷோர் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வகையில் புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கி உள்ளார். அவரது கட்சிக்கு ஜன் சூராஜ் கட்சி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. காந்தி ஜெயந்தி தினமான இன்று ஜன் சுராஜ்’ என்ற அரசியல் கட்சியை அவர் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரசாந்த் கிஷோர் பேசியதாவது:

தனது ஆட்சி அமைத்தால், மாநிலத்தில் அமலில் உள்ள மதுவிலக்கை ரத்து செய்வோம். மதுக்கடைகளை திறப்போம். மக்களுக்கு மாற்று அரசியலை அளிப்போம். கடந்த 25 முதல் 30 ஆண்டுகளாக மக்கள், ஆர்.ஜே.டி., கட்சிக்கும், பா.ஜ.,வுக்கும் மாறிமாறி ஓட்டுப் போடுகின்றனர். இது மாற்றப்பட வேண்டும். மாற்று அரசியலை கொண்டு வருபவர்கள் வாரிசு அரசியல்வாதியாக இருக்கக்கூடாது. 2025 சட்டசபை தேர்தலில் தனது ஜன் சுராஜ் கட்சி போட்டியிடும் என்றார்..


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.