போராடிய விவசாயிகளை ஒருமுறை கூட பிரதமர் மோடி சந்திக்கவில்லை – பிரியங்கா காந்தி

சண்டிகர்,

அரியானாவில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பேசியதாவது:-

பகவத் கீதையின் மூலம் நமது சுதந்திரப் போராட்டத்தை மகாத்மா காந்தி வழிநடத்தினார். இன்று அவரது பிறந்தநாள். அவரைப் பற்றிய நினைவுகளை நாம் நினைவுகூறுவோம். நவராத்திரி பண்டிகை நெருங்குகிறது. அநீதிக்கு எதிரான நீதியின் வெற்றியை கொண்டாடுவோம். இன்று எல்லா நிலைகளிலும் மக்களுக்கு துரோகம் இழைக்கப்படுகிறது.

விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தவர் பிரதமர் மோடி. சில கி.மீ. தொலைவில் போராடிய விவசாயிகளை ஒருமுறை கூட பிரதமர் மோடி சந்திக்கவில்லை. 3 சட்டங்களும் பெரும் தொழிலதிபர்களுக்குத்தான்; விவசாயிகளுக்கு அல்ல என்பது மோடிக்கு தெரியும்.

இரண்டு முறை பாஜகவுக்கு வாக்களித்தபோது, நாட்டின் அனைத்து விமான நிலையங்கள், துறைமுகங்கள் சில தொழில் அதிபர்களுக்கு வழங்கப்படும் அளவுக்கு கொள்ளை நடக்கும் என்று மக்கள் நினைக்கவில்லை. நாட்டிற்கு இவ்வளவு பெரிய துரோகம் நடக்கும் என்று எங்களால் கூட நினைத்து பார்க்க முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.