இந்திய வம்சாவளியை சேர்ந்த சிங்கப்பூர் முன்னாள் மந்திரிக்கு ஓராண்டு சிறை தண்டனை

சிங்கப்பூர்,

கடந்த 1962-ம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் ஈஸ்வரன். சிறுவயதிலேயே சிங்கப்பூரில் குடியேறிய இவர், 1997ம் ஆண்டு அந்த நாட்டு எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டார். 2006-ல் லீ ஹெய்ன் லூங்கின் மந்திரி சபையில் இடம்பெற்றார். வர்த்தக உறவுகளுக்கான மந்திரியாகவும், போக்குவரத்துத்துறை மந்திரியாகவும் பதவி வகித்து வந்த இவர், தொழிலதிபர்களிடம் இருந்து, 4,00,000 சிங்கப்பூர் டாலர் மதிப்புள்ள பரிசுப் பொருட்களை பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, தன்னுடைய மந்திரி பதவியை ராஜினாமா செய்த ஈஸ்வரன், அதன் பிறகு, தன் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று நிரூபிப்பேன் என கூறி வந்தார். கடைசியில், தன் மீதான 35 குற்றச்சாட்டுகளில் 5ல் குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகள் விலக்கப்பட்ட நிலையில், பரிசு பொருட்களை பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் மட்டும் அவர் குற்றவாளி என்று கோர்ட்டு உறுதி செய்தது. இதையடுத்து, முன்னாள் மந்திரி ஈஸ்வரனுக்கு 12 மாதம் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு கோர்ட்டு இன்று தீர்ப்பளித்துள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.