Pune: இரவில் நடைப்பயிற்சி சென்ற பெண்ணுக்குப் பாலியல் வன்கொடுமை; 3 பேர் கைது; தொடரும் விசாரணை

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் இரவில் காதலனுடன் நடைப்பயிற்சிக்குச் சென்ற பெண்ணை 3 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது.

புனே நகரின் கொண்ட்வாவில் உள்ள போப்தேவ் கர் என்ற இடத்திற்கு இரவு நேரத்தில் 21 வயது இளம் பெண் தனது காதலனுடன் நடைப்பயிற்சிக்குச் சென்றுள்ளார். அவர்கள் இருவரும் இரவு 11 மணிக்கு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்குச் சென்றபோது, அங்கு காரில் வந்த 3 பேர் தங்களை மனித உரிமை ஆர்வலர்கள் என்று கூறிக்கொண்டு அப்பெண்ணையும் அவருடன் வந்த காதலனையும் போட்டோ எடுத்தனர்.

பின்னர் அவர்கள் அப்பெண்ணுடன் வந்த நபரை அடித்து உதைத்துவிட்டு அப்பெண்ணைத் தங்களது காரில் அழைத்துச்சென்று கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அப்பெண்ணை அப்படியே விட்டுவிட்டுச் சென்றுள்ளனர். அவரை அவரது நண்பர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் இது குறித்து காவல்துறையில் புகார் செய்துள்ளார். அதன் அடிப்படையில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, கைது செய்ய 10 பேர் கொண்ட போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 3 பேரைக் கைது செய்து விசாரித்து வருவதாக காவல்துறை தெரிவித்தனர்.

புனேயில் இரண்டு நாட்களுக்கு முன்புதான், மாணவிகளைப் பள்ளிக்கு அழைத்துச் சென்றபோது அவர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி, பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்த பிறகுத் தனது பின்புறம் வலிப்பதாகத் தனது தாயாரிடம் தெரிவித்தார். உடனே என்ன நடந்தது என்று மாணவியிடம் அவரது தாயார் கேட்டபோது பள்ளி வேனில் ஓட்டுநர் மாணவியிடம் தகாத முறையில் நடந்தது தெரிய வந்தது.

மற்றொரு மாணவியிடமும் இதேபோன்று நடந்து கொண்டதாகத் தெரிவித்தார். உடனே அம்மாணவியின் தாயார் மற்ற மாணவிகளின் பெற்றோருடன் சென்று சம்பந்தப்பட்ட பள்ளி வேனை அடித்து உடைத்தனர். இது குறித்து காவல்துறை வழக்குப் பதிவு செய்து வேன் ஓட்டுநரைக் கைது செய்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.