இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு முழுமையான ஆதரவை வழங்க இந்தியா உறுதியளிப்பு

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் நேற்று (ஒக்டோபர் 4) கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்தார்.

கலாநிதி ஜெய்சங்கர், செப்டம்பர் 21 அன்று நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் வெற்றிக்கு இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடியின் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். நெருங்கிய இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கு இணைந்து பணியாற்றுவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டையும் அவர் உறுதியளித்தார். ” முழுமையான ஆதரவை வழங்க இந்தியா தயாராக உள்ளது” என்று அவர் கூறினார்.

 

பல ஆண்டுகளாக இலங்கைக்கு இந்தியா வழங்கிய உதவிகளுக்கு நன்றி தெரிவித்த பிரதமர், விரைவான பொருளாதார அபிவிருத்திக்கு தொடர்ச்சியான ஆதரவின் அவசியத்தை வலியுறுத்தினார். இலங்கை பொருளாதார ஸ்திரத்தன்மையின் ஒரு நிலைமாற்றக் காலத்தை கடந்து வருவதாக அவர் விளக்கினார்.

 

டிஜிட்டல் மயமாக்கல் முயற்சிகள் குறித்து வலியுறுத்திய பிரதமர் கலாநிதி அமரசூரிய, கிராமப்புறங்களுக்கு டிஜிட்டல் மயமாக்கலை விரிவுபடுத்துவதில் இந்தியாவின் பரந்த அனுபவத்திலிருந்து இலங்கை பயனடையலாம் என்று குறிப்பிட்டார். இலங்கை பிரதமர் மற்றும் இந்திய அமைச்சர் இருவரும், டிஜிட்டல் மயமாக்கல் பரிவர்த்தனைகளில் ஊழல் மற்றும் முறைகேடுகளை குறைக்க உதவும் என்றும், உற்பத்தியாளர்கள், கொள்வனவாளர்கள் மற்றும் விவசாய சமூகம் இதன் மூலம் பெரிதும் பயனடையும் என்றும் வலியுறுத்தினர்.

 

இலங்கையுடன் டிஜிட்டல் தளம் தொடர்பான அறிவை இந்தியா தொடர்ந்து பகிர்ந்து கொள்ளும் என்று அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். கதி சக்தி (Gati Shakthi) நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், இலங்கை அரச ஊழியர்களுக்கு அபிவிருத்தித் திட்ட நடைமுறைப்படுத்தலை விரைவாகக் கண்காணிப்பதற்கான வழிமுறைகள் குறித்து பயிற்சியளிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். சுங்கம், இறை வரி, தபால் திணைக்களம் உள்ளிட்ட பல துறைகளுக்கான திறன் விருத்தித் திட்டங்களை இந்தியா விரிவுபடுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

இலங்கை போன்ற அண்டை நாடுகள் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானவை என்றும், இந்தியாவில் இலங்கை பற்றிய மிகுந்த நல்லெண்ணம் இருப்பதாகவும் அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். தனது நெருங்கிய கடல்சார் அண்டை நாடாகவும் நெருக்கடியில் கைகொடுக்கும் நட்பு நாடாகவும் இலங்கைக்கான இந்தியாவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வலியுறுத்துவதே தனது விஜயத்தின் முக்கிய நோக்கமாகும் என்றும் அவர் கூறினார்.

 

பிரதமரும் இந்திய அமைச்சரும் வெவ்வேறு துறைகளில் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடினர்.

 

இந்திய தூதுக்குழுவில் இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, மேலதிக செயலாளர் (இந்து சமுத்திரப் பிராந்தியம்) புனித் அகர்வால், வெளியுறவு அமைச்சின் இணை செயலாளர் சந்தீப் குமார் பயாபு மற்றும் துணை உயர் ஸ்தானிகர் சத்யஞ்சல் பாண்டே ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

இந்த நிகழ்வில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதத்திரி, வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் (தெற்காசியா) நிலுகா கதுரகமுவ, பிரதமரின் ஊடகப் பணிப்பாளர் சுகீஸ்வர சேனாதிர மற்றும் சிரேஷ்ட உதவிச் செயலாளர் பியுமி பண்டார ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.