நவராத்திரி: 9 நாள் கொண்டாட்டம், கொலு வைபவம்; விரத நியதிகள் – பலன்கள்

`நவ’ எனில் ஒன்பது; ‘ராத்ரீ’ எனில் இரவு. ஆக ‘நவ ராத்ரீ’ (நவ ராத்திரி) எனில், 9 இரவுகள் கூடிய நாட்கள்.

‘நவ’ எனில் ‘புதுமையான’ என்றும் பொருள் உண்டு. ஆக, இந்த நாட்களில் நாம் கடைப்பிடிக்கும் பூஜைகளினால் நமக்குப் புதுமையான புத்துணர்ச்சி கிடைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதுமட்டுமா? நவகிரகங்களினால் ஆபத்து ஏற்படாமல் இருக்க இந்த நவராத்திரி காலங்களில் அனைவரும் அம்பிகையை வழிபடுதல் வேண்டும். அவள்தானே உலகுக்கெல்லாம் மூல கரு (‘விச்வஸ்ய பீஜம்’). அவளை வழிபடுவதால், நம் உலகம் என்றில்லை; இந்த பிரபஞ்சம் முழுக்க வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் நன்மை உண்டாகும் என்பது நிச்சயம்.

நவராத்திரி கொலு பொம்மைகள்

அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய விரத நியதிகள்…

ஆச்வின மாதம் அதாவது, புரட்டாசி மாத அமாவாசைக்கு அடுத்த நாளை (பிரதமை முதல்) நவராத்திரியின் துவக்க நாளாகக் கொள்ள வேண்டும் என்கிறது ஸ்கந்த புராணம். நவராத்திரி வழிபாடு செய்யும் வழிமுறைகளை தேவி பாகவதம் நமக்கு அழகாகச் சொல்லித் தருகிறது. புரட்டாசி அமாவாசை அடுத்த பிரதமை துவங்கி 9 நாட்கள் நவராத்திரி அனுஷ்டிக்க வேண்டும். நவராத்திரிக்கு முதல் நாள், அதாவது அமாவாசை தினத்திலேயே பூஜைக்கு வேண்டியவற்றை சேகரிக்க வேண்டும். அன்றைய தினமே பூஜையறையைக் கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.

பூஜையறையில் பூஜை மண்டபம் அமைப்பதற்கான இடம் மேடு பள்ளம் இல்லாமல் சமதளமாக இருக்க வேண்டும். அதை பசுஞ்சாணத்தால் மெழுகி, கோலமிட்டு செம்மண் இட வேண்டும். அந்த இடத்தின் நான்கு மூலைகளிலும் 16 முழம் உயரத்துடன் தூண்கள் நட்டு, தோரணங்களால் அலங்கரிக்க வேண்டும். தூண்களில் அம்பாள் உருவம் உள்ள சிவப்புக் கொடி கட்டுவது சிறப்பு. பூஜை இடத்தில் மையமாக நான்கு முழம் நீளஅகலமும், ஒரு முழம் உயரமும் கொண்ட ஒரு பீடம் (மேடை) அமைக்க வேண்டும். பிரதமை அன்று அதிகாலையில் எழுந்து நீராடி, பூஜைக்குத் தயாராக வேண்டும். (இயன்ற வரையில் தகுந்த அந்தணர்களை வரவழைத்து, வழிபாடுகள் நடத்தி வைக்கச் சொல்வது சிறப்பு).

நவராத்திரி கொலு பொம்மைகள்

பூஜை மேடையில் வெண்பட்டு விரித்த ஆசனம் இட்டு, அதன் மீது சங்குசக்கரம், கதை மற்றும் தாமரை ஏந்திய நான்கு கரங்களுடன் திகழும் தேவியின் திருவுருவம் அல்லது 18 கரங்கள் கொண்ட அம்பாளின் திருவடிவத்தை வைத்து தூய ஆடை ஆபரணம், மலர்களால் அலங்காரம் செய்ய வேண்டும். அருகில் அம்பிகைக்கான கலச பூஜைக்காக கலசம் வைத்து அதில் நீர் நிரப்பி, தங்கம், ரத்தினம் ஆகியவற்றைப் போட்டு, மாவிலைகளை மேலே வைத்து மங்கல இசை முழங்க, வேத கோஷம் ஒலிக்க, பூஜையைத் துவங்க வேண்டும்.

‘தாயே… உன்னைப் பிரார்த்தித்து நவராத்திரி பூஜை செய்யப் போகிறேன். அது நல்லபடியாக நிறைவேற உன்னருள் வேண்டும். பூஜையில் ஏதேனும் குற்றம் குறைகள் இருப்பினும் பொறுத்துக்கொண்டு, உனது அனுக்கிரகத்தை எங்கள் வீட்டில் நிறையச் செய்ய வேண்டும்’’ என்று மனதார வேண்டிக்கொண்டு பூஜிக்க வேண்டும். பலவிதமான பழரசங்கள், இளநீர், மாதுளை, வாழை, மா, பலா முதலானவற்றையும், அன்னத்தையும் (சித்ரான்னங்கள்) நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும். இப்படி தினமும் மூன்று கால பூஜை செய்தல் வேண்டும். 9 நாட்களும் விரதம் இருப்பவர்கள் பூஜை முடித்து, ஒரு வேளை உண்ண வேண்டும். தரையில் படுத்துத் தூங்க வேண்டும்.

9 நாட்கள் விரதம் இருக்க இயலாதவர்கள் என்ன செய்யலாம்?

சப்தமி, அஷ்டமி, நவமி ஆகிய மூன்று நாட்கள் விரதமிருந்து வழிபடலாம். அதுவும் இயலவில்லை எனில், அஷ்டமி தினத்தில் அம்பாளை பூஜித்து வழிபட்டு அருள் பெறலாம். இந்த தினத்தில்தான் தட்ச யாகத்தை அழித்த அம்பாள், அநேக கோடி யோகினியருடன் தோன்றினாள். அதனால் இந்த தினம் விசேஷமானது.

எவரொருவர் இந்த விரதத்தைத் தொடர்ந்து 9 நாட்கள் கடைப்பிடிக்கிறார்களோ, அவர்களுக்கு தேவர்களுக்கும் கிட்டாத இன்பமும், பிணியின்மையும் வரமாகக் கிட்டும்; சத்ருக்கள் தொல்லையும் நீங்கும்.

பிள்ளைகளுக்காக ஏடு அடுக்குவது எப்போது?

மூல நட்சத்திரம் அல்லது நவமியன்று (இந்த வருடம் 11.10.24 வெள்ளிக்கிழமை அன்று) நாம் அன்றாடம் வேலைக்கு உபயோகப்படுத்தும் பொருட்களையும், குழந்தைகளின் புத்தகங்களையும் பூஜையில் வைத்து வழிபட்டு, அன்று அவற்றைப் பயன்படுத்தாமல், அடுத்த நாள் விஜயதசமியன்று அந்தப் பொருட்களை கண்டிப்பாக பயன்படுத்துதல் சிறப்பு.

நவராத்திரி விரத பலன்…

நவராத்திரி விரதத்தைப் போன்று எளிமையானதும் அதேநேரம் மிகுந்த பலன்களைத் தரக்கூடியதுமான வேறு விரதங்கள் இல்லை என்கின்றன புராணங்கள். தனம், தானியம், நிலையான இன்பம், நீண்ட ஆயுள், ஆரோக்கியம், ஸ்வர்க்கம், மோட்சம் என ஒரு மனிதனுக்கு வேண்டிய அனைத்தையும் தரக்கூடிய விரதம் நவராத்திரி விரதம்.

குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு நிச்சயம் குழந்தை பாக்கியம் கிட்டும். படிப்பில் மந்தமாக இருப்பவர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்ப தால், உயர்ந்த நிலையை அடையலாம்.

கொலு வைப்பது எப்படி?

ஆதிசக்தியானவள் இந்த அகிலத்தில் எல்லா உயிர்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறாள். அவளின்றி அணுவும் அசையாது என்பதை உணர்த்துவதே கொலு தத்துவம். அதனால்தான் ஓரறிவு உயிர்கள் முதல் அனைத்துக்கும் ஆதாரமான அம்பிகை வரையிலுமான பொம்மைகள் நவராத்திரி கொலுவில் இடம்பெறும். இந்த கொலு பொம்மைகளை எந்தெந்த படி நிலைகளில் எப்படி அடுக்கவேண்டும் என்ற நியதியை முன்னோர் வகுத்துள்ளனர்.

கீழிருந்து முதல்படியில்: மரங்கள், செடிகொடிகள் போன்ற ஓரறிவு உயிர்கள் நிறைந்த பூங்காக்களை இடம்பெறச் செய்யலாம்.

2ம் படி: நத்தை, அட்டை முதலான மெள்ள ஊர்ந்து செல்லும் ஈரறிவு படைத்த உயிரினங்கள்.

3ம் படி: எறும்பு, பூரான் போன்ற மூன்றறிவு உயிரினங்கள்

4ம் படி: பறவைகள் முதலானவை.

5ம் படி: பசு, யானை முதலான ஐந்தறிவு கொண்ட விலங்கினங்கள்.

6ம் படி: மனிதர்கள் இடம்பெறலாம். வணிகர், குறவன் குறத்தி முதலான பொம்மைகள்.

7ம் படி: தெய்வ அவதாரங்கள், நவகிரகங்கள் முதலான தெய்வ பொம்மைகள்.

8ம் படி: மும்மூர்த்தியரும் தேவியருடன் விளங்கும் பொம்மைகள் இடம்பெறலாம்.

9ம் படி: இதில் ராஜராஜேஸ்வரியின் வடிவம் பிரதானமாக இடம்பெற வேண்டும். பூரண கலசமும் வைப்பார்கள்.

ஆன்மா, படிப்படியாகப் பரிணாமம் அடைகிறது. ஒன்றுமில்லாத அஃறிணை தன்மையில் தொடங்கி, ஓரறிவு முதலான ஐந்தறிவு உயிரினங்கள் தொடர்ந்து, ஆறறிவு நிலையும் கண்டு, அதனையும் தாண்டி, முனிவராய் மனமும் மதமும் அடங்கி, பின்னர் தெய்விக நிலைக்கு உயர்கிறது. அவ்வாறு உயரும் ஆன்மாவை, அம்பிகை தன்னுடன் ஐக்கியப்படுத்திக்கொள்கிறாள் என்பதே கொலுவைப்பதன் தாத்பரியம்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.