லெபனானில் இருந்து 97 பேரை விமானம் மூலம் மீட்ட தென் கொரியா

சியோல்,

பாலஸ்தீனத்தின் காசா நகர் மீது இஸ்ரேல் போர் தொடங்கி நாளை மறுநாளுடன் (திங்கட்கிழமை) ஓர் ஆண்டாகிறது. ஈரானின் ஆதரவை பெற்ற ஹமாஸ் அமைப்புக்கு எதிரான இந்த போரில் காசாவில் சுமார் 42 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்.

இதனிடையே மத்திய கிழக்கின் பல்வேறு நாடுகளில் உள்ள ஈரான் ஆதரவை பெற்ற ஆயுத குழுக்கள் ஹமாசுக்கு ஆதரவாக இஸ்ரேலை குறிவைத்து வான்வழியாக தாக்குதல்களை நடத்தி வருகின்றன. அவர்களுக்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. அந்த வகையில் லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் கடந்த மாதம் 23-ந் தேதி லெபனான் மீது மிகப்பெரிய அளவிலான வான்வழி தாக்குதலை தொடங்கியது.

தலைநகர் பெய்ரூட்டில் நடத்தப்பட்ட வான்தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா, ஈரானின் மூத்த ராணுவ தளபதி அப்பாஸ் உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக இஸ்ரேலிய படைகள் லெபனானுக்குள் ஊடுருவி தரைவழி தாக்குதலையும் தொடங்கியது.

இந்நிலையில் லெபனானில் பதற்றம் நிலவி வரும் சூழலில் 97 பேரை விமானம் மூலம் மீட்டதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. விமானத்தில் இருந்த குழுவில் தென் கொரியா நாட்டை சேர்ந்த பிரஜைகளும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் உள்ளடங்குவதாக தென் கொரியா வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் லெபனானில் பணிபுரிந்த தூதர்கள் மற்றும் தூதரக பணியாளர்கள் தவிர சுமார் 30 தென் கொரியர்கள் இருந்ததாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல், மத்திய கிழக்கில் உள்ள மோதல் பகுதிகளுக்கு ராணுவ விமானங்களை அனுப்புமாறு அதிகாரிகளுக்கு கடந்த புதன்கிழமை அறிவுறுத்தினார், அவர் பிராந்தியத்தில் தீவிரமான சண்டையின் தாக்கம் குறித்து விவாதிக்க ஒரு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். சுமார் 480 தென் கொரிய பிரஜைகள் இஸ்ரேலிலும், 110 பேர் ஈரானிலும் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.