Meiyazhagan: `மெய்யழகன் கதாபாத்திரத்திற்கு இன்ஸ்பிரேஷன் இவங்கதான்!' -இயக்குநர் பிரேம் குமார் பேட்டி

`மெய்யழகன்’ திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது.

கார்த்தி போன்ற நாயக அந்தஸ்துடைய நடிகரை எந்த சமரசமுமின்றி அழகான பீல் குட் கதையில் நடிக்க வைத்திருக்கிறார், இயக்குநர் பிரேம் குமார். இயக்குநர் நினைத்தது போலவே அத்தனை துல்லியமாக கதாபாத்திரங்களுக்கு கார்த்தியும், அரவிந்த்சாமியும் உயிர் கொடுத்திருந்தார்கள். ‘மெய்யழகன்’ குறித்து இயக்குநரிடம் உரையாடினோம். அதிலிருந்து….

‘மெய்யழகன்’ ரிலீஸூக்குப் பிறகு எவ்வளவு நிறைவாக இருக்கு ?

`96′, `மெய்யழகன்’னு ரெண்டு படத்திலையும் மக்கள்கிட்ட இருக்கிற அன்பு வெளிப்படணும்னுதான் விரும்பினேன். `96′ படத்துக்கு பலரும் `இந்த படத்தை எடுத்ததுக்கு நன்றி’னு சொல்லி சோசியல் மீடியாவுல போட்டாங்க. இப்போ `மெய்யழகன்’னுக்கும் அதே மாதிரி போடுறாங்க. நான் நினைச்சது நடந்துருச்சு. மக்கள் கிட்ட இருந்து அன்பு வெளிப்பட்டிருச்சு. பலர் படம் பார்த்துட்டு ஊருக்குப் போறாங்கனு சொல்லும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கு. ஆனா, படத்தை நினைச்ச மாதிரியே எடுத்துட்டோம்னு எனக்கு அப்போதே ஒரு நிறைவு வந்துடுச்சு. இப்போ ரிலீஸுக்குப் பிறகு தமிழைவிட தெலுங்குல பெரிய ஹிட்.

Meiyazhagan Director Prem Kumar

படத்துல என்னென்ன விஷயங்களெல்லாம் புனைவு… எதெல்லாம் உண்மையாகவே உங்க வாழ்க்கைல நடந்தது?

படத்தோட தொடக்கத்துல வர்ற ஃபிளாஷ்ஃபேக் காட்சி உண்மையாகவே எனக்கு நடந்தது. நிதர்சனமாகவும் உறவு முறைகளை மறந்திடுவேன். மறந்ததை சமாளிக்க முயற்சிப் பண்ணி மாட்டிக்குவேன். சில சமயங்கள்ல உறவு முறையை மாத்தி சொல்லிடுவேன். இந்த படத்துல வர்ற அருள் மொழி நான்தான். `அசுரவதம்’ திரைப்படத்தினுடைய இயக்குநரான மருது பாண்டியன்தான் `மெய்யழகன்’. நல்ல வாசிப்பு பழக்கம் இருக்கக்கூடிய மனிதர் அவர். ரொம்பவே வெள்ளந்தியான மனுஷன். சின்ன சின்ன விஷயங்களையும் அப்படி ரசிப்பாரு. அதே மாதிரி `மெய்யழகன்’ கதாபாத்திரம் மாதிரியே எங்க வீட்டிற்கு வர்ற பிளம்பர் ஒருத்தர் இருக்காரு. எல்லா விஷயத்தையும் ரொம்பவே விளக்கி சொல்வாரு. எங்கையாவது வேலையாக அவசர அவசரமாக கிளம்பிட்டு இருக்கும்போது வந்து ஒரு விஷயத்தை சொல்வாரு. நானும் இருக்கிற வேலையை விட்டுட்டு அவர் சொல்றதை கேட்டுட்டு இருப்பேன். அந்தளவுக்கு சுவாரஸ்யமாக சொல்வாரு.

ராஜ்கிரண் சாரை ரொம்பவே எமோஷனலான கதாபாத்திரத்துல பார்த்திருந்தோம்… அதுக்கான தொடக்கப் புள்ளி பற்றி…

அந்த கதாபாத்திரத்துக்கு இன்ஸ்பிரேஷன் என்னுடைய தாய் மாமாதான். அவர் பெயர் ராமசந்திரன். அவருடைய பெயரைதான் `96′ படத்துல வச்சிருந்தோம். ரொம்பவே முரட்டுதனமாக இருப்பாரு. அப்படியானவர்கள் நம்மை அடிச்சு, கிள்ளிதான் கொஞ்சுவாங்க. ஆனா அவங்களுக்குள்ள ஒரு மனசு இருக்கும். அந்த மாதிரிதான் ராஜ் கிரண் சார் கதாபாத்திரம். அந்த மாதிரியான மனுஷங்க சின்னதாக ஒரு காமெடி பண்ணினாலும் நமக்கு சிரிப்பு அதிகமாக வரும். ராஜ் கிரண் சார் எமோஷனல் காட்சிகள்ல நடிக்கும்போது படப்பிடிப்பு தளத்துல இருக்கிற அத்தனை பேரையும் கலங்க வச்சிடுவார். மற்ற கதாபாத்திரங்களை திட்டுற மாதிரி ஒரு சின்ன வசனம் இருந்தாலும் `தம்பி இப்படி ஒன்னு இருக்கு’னு என்கிட்ட வந்திடுவாரு. அவர்கூட வேலை பார்த்தது சுகமான அனுபவம்.

Meiyazhagan Director Prem Kumar

18 நிமிட காட்சிகளை நீக்கிவிடலாம் என எதற்காக முடிவு பண்ணினீங்க?

படத்தை பற்றி ரெண்டு வகையிலான விமர்சனத்தை சொன்னாங்க. ஒரு சமூக பிரச்னையை கண்டுக்காமல் அதை அப்படியே கடந்து போறவங்க முதல் வகை. இரண்டாவது வகை அந்த சமூக பிரச்னையை கடந்து போக முடியாமல் இருக்கிறவங்க. பலர் இது இரண்டு நபர்களை பற்றிய கதை, இவங்க ரெண்டு பேர்குள்ள எதுக்கு இந்த விஷயங்களெல்லாம் வரணும்னு விமர்சனம் முன்வைக்கிறாங்க. நான் ரெண்டு பேருக்கு இடையிலான கதைனு சொல்லல. ஆனா அப்படி கிடையாது. ஒரு போர் பற்றி நினைக்கும்போது, மனைவி, மாடு, பாம்புனு அத்தனை விஷயங்கள் பற்றியும் அவன் நினைக்கிறதுனாலதான் அவன் மெய்யழகன். இந்த மாதிரியான படங்கள் வெற்றி நிலையை அடைந்தால்தான் அடுத்த அந்த தயாரிப்பு நிறுவனத்துல இருந்து இதே மாதிரி மற்றொரு திரைப்படம் வரும். படத்தின் நடிகரும் `நல்ல படம் பண்ணினோம். ஆனா சரியாகப் போகல’னு நினைச்சிடக் கூடாது. அதுனாலதான் மக்களுடைய குரலுக்கு செவிசாய்ச்சோம். 18 நிமிட காட்சிகளை நீக்கினதுக்குப் பிறகு வலுவான கண்டனக் குரல்கள் வருது. நீக்கிய காட்சிகளைதான் அதிகமாக ரசிச்சோம்னு சொல்றாங்க. அந்த காட்சிகளெல்லாம் இப்போ டெலீடட் சீன்களாக வெளிவந்துட்டு இருக்கு.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.