இலவச மின்சாரம் தந்தால் பிரதமர் மோடிக்காக பிரச்சாரம் செய்ய தயார்: அர்விந்த் கேஜ்ரிவால் சவால்

புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக இலவச மின்சார அறிவிப்பை வெளியிட்டால் பிரதமர் நரேந்திர மோடிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்ய தயார் என ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் சவால் விடுத்துள்ளார்.

ஜனதா கி அதாலத் எனும் மக்கள் நீதிமன்றம் நிகழ்ச்சியில் கூடியிருந்த பொதுமக்களிடம் கேஜ்ரிவால் நேற்று கூறியதாவது: பாஜகவின் இரட்டை என்ஜின் அரசு நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் தோல்வியை தழுவியுள்ளது. அதனால், ஹரியானா, ஜம்மு காஷ்மீர் மாநிலங்களிலிருந்து அவர்கள் வெளியேற வேண்டிய நேரம் வந்துவிட்டது. பாஜகவின் இரட்டை இன்ஜின் மாடல் அரசு என்பது இரண்டுபக்கமும் கொள்ளையடிக்கவும், இரண்டு பக்கம் ஊழல்செய்யவும் மட்டுமே உதவுகிறது. நான் பிரதமர் மோடிக்கு நேரடியாகவே சவால் விடுக்கிறேன்.

இரட்டை இன்ஜின் அரசு கவிழும்: டெல்லி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் பிப்ரவரிக்குள்ளாக நீங்கள் ஆட்சி செய்யும் 22 மாநிலங்களில் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டால் பாஜகவுக்காகவும், பிரதமர் நரேந்திர மோடிக்காகவும் நான் பிரச்சாரம் செய்ய தயார். இதனை செய்ய அவர்கள் தயாரா?.ஹரியானாவில் இரட்டை இன்ஜின் அரசு கவிழும் நேரம் வந்துவிட்டது. அதேபோன்று ஜம்மு-காஷ்மீரிலும் பாஜகவின் செல்வாக்கு முடிவுக்கு வரும்.

ஏழைகளுக்கு எதிரான அரசு: பாஜக எப்போதுமே ஏழைகளுக்கு எதிரான அரசாகவே செயல்பட்டு வருகிறது. பஸ் மார்ஷல் மற்றும் டேட்டா என்ட்ரிஆபரேட்டரகள் நீக்கப்பட்டதே அதற்கு சான்று. அதே போன்று,டெல்லியில் ஊர்க்காவல் படையினர் ஊதியம் நிறுத்தப்பட்டதும் பாஜகவின் உண்மை முகத்தை காட்டியுள்ளது.

துணை நிலை ஆளுநரின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி அரசில் ஜனநாயகம் என்பதே இல்லை. இவ்வாறு கேஜ்ரிவால் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.