“அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம்” – அமெரிக்காவுக்கு வட கொரியா மீண்டும் மிரட்டல்

பியோங்யாங்: கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றத்தை ஏற்படுத்தும் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் என்று வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார்.

கிம் ஜாங் உன் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய வடகொரிய அதிபர் கிம் “கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றத்தை ஏற்படுத்தினால் எந்தவித தயக்கங்களும் இன்றி எங்கள் எதிரிகளின் மீது எல்லா விதமான தாக்குதல்களையும் பயன்படுத்துவோம். அதில் அணு ஆயுதங்களுக்கும் விதிவிலக்கு இல்லை. தென் கொரியாவும், அமெரிக்காவும் கூட்டு அணுசக்தி அடிப்படையில் தங்கள் ராணுவக் கூட்டணியை வலுப்படுத்த முயல்வதால் வட கொரியாவின் அணுசக்தி முழுமையாக மேம்படுத்தப்பட வேண்டும். இது கொரிய தீபகற்பத்தின் மீதான அதிகார சமநிலையை உடைக்கும் ஆபத்தை அதிகரிக்கும்” என்று தெரிவித்தார்.

ஏற்கெனவே பலமுறை அமெரிக்கா மற்றும் வடகொரியாவுக்கு எதிராக கிம் மிரட்டல்கள் விடுத்திருந்தாலும், அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் இந்த புதிய மிரட்டல் கவலைக்குரியதாக பார்க்கப்படுகிறது.

வட கொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தல்களை சமாளிக்கும் பொருட்டு அமெரிக்காவின் அணு ஆயுதங்கள் – தென் கொரியாவின் திறன் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் நோக்கில் கடந்த ஜூலையில் இருநாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. தென் கொரியாவிடம் அணு ஆயுதங்கள் இல்லை. வட கொரியா அணு ஆயுதங்களை பயன்படுத்த முயற்சித்தால், அதுவே கிம் ஆட்சியின் முடிவாக இருக்கும் என அமெரிக்க மற்றும் தென் கொரிய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.