மகளிர் டி20 உலகக் கோப்பை; இங்கிலாந்து அபார பந்துவீச்சு… தென் ஆப்பிரிக்கா 124 ரன்கள் சேர்ப்பு

துபாய்,

9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கலந்து கொண்டுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஏ பிரிவில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான் அணிகளும், ‘பி’ பிரிவில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து – தென் ஆப்பிரிக்கா அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக லாரா வோல்வார்ட் மற்றும் டாஸ்மின் பிரிட்ஸ் ஆகியோர் களம் இறங்கினர். இதில் டாஸ்மின் பிரிட்ஸ் 13 ரன்னிலும், அடுத்து வந்த அன்னேக் போஷ் 18 ரன்னிலும், மரிசான் கேப் 26 ரன்னிலும், சோலி ட்ரையான் 2 ரன்னிலும் அவுட் ஆகினர்.

சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடிய லாரா வோல்வார்ட் 42 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து அன்னரி டெர்க்சன் மற்றும் சுனே லூஸ் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 124 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக லாரா வோல்வார்ட் 42 ரன் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் சோபி எக்லெஸ்டோன் 2 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 125 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து ஆட உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.