இலங்கை கடற்படையினரால் புதுக்கோட்டை மீனவர்கள் 21 பேர் கைது

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து இன்று (அக்.9) கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து 68 விசைப்படகுகளிலும், கோட்டைப்பட்டினத்தில் இருந்து 98 விசைப்படகுகளிலும் மீனவர்கள் காலை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். பிற்பகலில் நெடுந்தீவு பகுதியில் கோட்டைப்பட்டினத்தில் இருந்து சென்ற ஏ.கலைவாணனுக்கு சொந்தமான படகில் கே.ரமேஷ்(27), ஆர்.ஜானகிராமன்(27), டி.கிருஷ்ணன்(68), குமார்(40), உ.ரமேஷ்(51), ராஜ்(55), உ.வைத்தியநாதனுக்கு சொந்தமான படகில் அவரது மகன்கள் ரவீந்தர்(42), உலகநாதன்(38), அருள்நாதன்(29), வைத்தியநாதன்(30), முத்து மகன் குமரேசன்(37), ஆர்.மகேஷ்(55), சி.மூர்த்தி என்பவருக்கு சொந்தமான படகில் மதியழகன் மகன்கள் மதன்(27), மகேந்திரன்(20), சுப்பிரமணியன் மகன் முனிவேல்(66), எஸ்.விஜய்(31), சி.விக்கி(18) ஆகியோர் மீன்பிடித்துள்ளனர்.

இதேபோல, கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து அஞ்சலி தேவிக்கு சொந்தமான படகில் மீன்பிடித்த எஸ்.சிவக்குமார்(28), வி.சூரியா(33), எம்.சூரியபிரகாஷ்(25), ஏ.கருப்பசாமி(26) என மொத்தம் 4 விசைப் படகுகளைச் சேர்ந்த 21 மீனவர்கள் மீன்பிடித்துள்ளனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் ,எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி அனைவரையும் கைது செய்ததோடு, அவர்களது 4 படகுகளையும் சிறைபிடித்துச் சென்றனர். காங்கேசன் துறை கடற்படை தளத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மீன்வளத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.