புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் அக்.15 வரை கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் 15-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: லட்சத்தீவு, அதை ஒட்டிய அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அதேநேரம், குமரிக்கடல், அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இலங்கை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக, இன்று முதல் 15-ம் தேதி வரை தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று (10-ம் தேதி) சேலம், கிருஷ்ணகிரி தருமபுரி, திருப்பத்தூர், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், கரூர், திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களிலும், நாளை (11-ம் தேதி) மேற்கண்ட பகுதிகளுடன் மதுரை, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில்அதிகபட்சமாக கரூர், மாயனூரில் 8 செ.மீ. பெரம்பலூர், கோவை மாவட்டம் மக்கினம்பட்டி, திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில், திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.