ஹோட்டலில் போதை பொருள் சப்ளை நடந்த வழக்கு; மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர், பிரயாகா மார்ட்டினிடம் விசாரணை!

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல ரௌடி ஓம்பிரகாஷ். அவர்மீது கொலை உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில் ஓம் பிரகாஷ் வெளிநாட்டில் இருந்து போதைப்பொருள்களைக் கடத்தி வந்து கொச்சி மரட் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் வைத்து ரகசியமாக சப்ளை செய்வதாக போதைப்பொருள் தடுப்புத் துறை போலீஸுக்கு ரகசிய தகவல் சென்றுள்ளது. இதையடுத்து சில நாள்களுக்கு முன்பு போலீஸார் மரட் நட்சத்திர ஹோட்டலில் நடத்திய ரெய்டில் ஓம்பிரகாஷ் மற்றும் அவரது கூட்டாளியான கொல்லத்தைச் சேர்ந்த ஷிஹாஸ் ஆகியோர் சிக்கியுள்ளனர். அவர்கள் தங்கியிருந்த அறையில் இருந்து கொக்கையின் உள்ளிட்ட போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவர்களை கைதுசெய்து கோர்ட்டில் ஆஜர்படுத்திய நிலையில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கொச்சி போல்காட்டியில் அலன் வாக்கரின் டி.ஜே இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதாகக்கூறி அந்த நட்சத்திர ஹோட்டலில் அறை எடுத்து போதைப்பொருள் சப்ளை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த ஹோட்டலில் ஃபாரன்ஸிக் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையே ஓம்பிரகாஷை நட்சத்திர ஹோட்டலில் சந்தித்தவர்களின் விவரங்களை சி.சி.டி.வி கேமராக்கள் மூலம் போலீஸார் சேகரித்துள்ளனர். அதில் சுமார் 20 பேரின் பட்டியலை போலீஸார் சேகரித்துள்ளனர். அதில் நடிகர் ஸ்ரீநாத் பாஸி மற்றும் நடிகை பிரயாகா மார்ட்டின் ஆகியோர் நட்சத்திர ஹோட்டலில் ஓம்பிரகாஷை அவரது அறையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்தித்ததாக போலீஸார் கண்டறிந்துள்ளனர்.

நசிகர் ஸ்ரீநாத் பாஸி

எளமக்கரை பகுதியைச் சேர்ந்த பினு ஜோசப் என்பவர் ஸ்ரீநாத்தையும், பிரயாகா மார்ட்டினையும் அந்த ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றதாக போலீஸ் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. பினு ஜோசப்பை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். மேலும், நடிகர் ஸ்ரீநாத் பாஸி மற்றும் நடிகை பிரயாகா மார்ட்டின் ஆகியோர் நேற்று (அக்.10) விசாரணைக்கு ஆஜரானார்கள். நடிகர் ஸ்ரீநாத் பாஸி-யிடம் மரட் போலீஸார் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பின் ஸ்ரீநாத் பாசி கூறுகையில், “ஓம்பிரகாஷுடன் எனக்கு எந்த பந்தமும் இல்லை. போதைப்பொருள் பார்ட்டி நடந்தது பற்றி எனக்கு தெரியாது. நான் போதைப்பொருள் பயன்படுத்தியது கிடையாது. பினு ஜோசப்புடன் அந்த ஹோட்டலுக்குச் சென்றேன். பினு ஜோசப்புக்கும் எனக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் மூலம் நட்பு உள்ளது” என்றார்.

போதைபொருள் சப்ளை வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஓம்பிரகாஷ்

நடிகை பிரயாகா மார்ட்டின் எர்ணாகுளம் சவுத் காவல் நிலையத்தில் விசாரணைக்குச் செல்லும்போது நடிகரும் வழக்கறிஞருமான ஷாபு மோன் உடன் சென்றிருந்தார். விசாரணை முடிந்து வெளியே வந்த நடிகை பிரயாகா மார்ட்டின் கூறுகையில், “அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தேன். போதைப்பொருள் வழக்கு என்று செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து எனது இரண்டு போன்களும் ஓயாமல் அடித்துக்கொண்டே இருக்கின்றன. என்னைப் பற்றி வெளியான செய்திகளை நான் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். நண்பர் ஒருவரை பார்க்கத்தான் நான் அந்த ஹோட்டலுக்குச் சென்றேன். தற்செயலாக ஓம்பிரகாஷ் அங்கு இருந்துள்ளதாகச் சொல்கிறார்கள். அவரை நான் பார்க்கவோ, சந்திக்கவோ இல்லை. இது குறித்த செய்தி வெளியான பிறகுதான் நான் கூகுளில் தேடி ஓம்பிரகாஷ் குறித்து தெரிந்துகொண்டேன்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.