பிஹாரில் துர்கா பூஜை பந்தல்களில் வாள் வழங்கிய பாஜக எம்எல்ஏ: ஆதரவும் எதிர்ப்பும்

பாட்னா: விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு பிஹார் மாநிலத்தில் பாஜக சட்டப்பேரவை உறுப்பினரான மிதிலேஷ் குமார், தனது சீதாமரி தொகுதியில் பெண் பிள்ளைகளுக்கு வாள் வழங்கி உள்ளார்.

அவரது இந்த செயல் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அதே நேரத்தில் இதை ஆதரிக்கும் வகையில் சனாதன நடைமுறை என பாஜக சொல்லியுள்ளது. துர்கா பூஜை கொண்டாட்டத்தில் பெண் பிள்ளைகளுக்கு வாள் மற்றும் ராமாயணத்தை அவர் வழங்கியுள்ளார்.

“வாள்களை வழங்கி நமது சகோதரிகளை பலம் கொண்டவர்களாக மாற்றியுள்ளேன். இதன் மூலம் தேவையுள்ள நேரத்தில் அவர்களுக்கு எதிராக அட்டூழியங்களை செய்யும் பிசாசுகளின் கைகளை வெட்டலாம். இப்போது பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக அதிகளவில் குற்ற சம்பவங்கள் அரங்கேறுகின்றன. அதன் பிறகு நீதி வேண்டியும், போலீஸார் விசாரணை மேற்கொள்ளவும் அவர்கள் அலைக்கழிக்கப் படுகின்றனர்.

நீதி தாமதமாவதால் சில நேரங்களில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக பல தலைவர்கள் பேசுகின்றனர். இப்போது கையில் வாளை ஏந்துவதன் மூலம் தேவி துர்க்கையை போலவும், ராணி லட்சுமிபாய் போலவும் தங்களை தற்காத்துக் கொள்ள முடியும்” என மிதிலேஷ் குமார் தெரிவித்தார்.

அவர் பங்கேற்ற துர்கா பூஜை நிகழ்வில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினரும் பங்கேற்றனர். “விஜயதசமி நாளில் வாளை இளம் பெண்களுக்கு அளித்ததில் எந்த தவறும் இல்லை. இது சனாதன தர்மத்தின் பாரம்பரியம். தங்களை தற்காத்துக் கொள்ளவும், உதவி வேண்டுபவர்களுக்கு உதவவும் தான் மிதிலேஷ் இதை செய்துள்ளார்” என பாஜக செய்தித் தொடர்பாளர் குந்தல் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி கண்டனம்: “ஜனநாயக அமைப்பை பலவீனப்படுத்தும் வகையில் மிதிலேஷ் இதை செய்துள்ளார். பாவம் அந்த அப்பாவி பெண் பிள்ளைகள். வெறுப்புணர்வை பரப்பும் வகையில் அவரது செயல் உள்ளது. மக்கள் பிரச்சினைகள் குறித்து அவர்கள் பேச மறுக்கிறார்கள். சாத்தான் யார் என்பதும், அவர்களை யார் காக்கிறார்கள் என்பதையும் நாங்கள் அறிவோம். பெண்களிடம் தவறாக நடந்து கொண்ட மதத் தலைவர்களை காப்பது பாஜகதான்” என ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் இஜாஸ் அகமது தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.