ரேஷன் மூலம் 2028 வரை இலவச அரிசி: மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

புதுடெல்லி: ரேஷனில் வழங்கப்பட்டு வரும் மத்திய அரசின் இலவச அரிசி திட்டத்தை 2028-ம் ஆண்டு வரை நீட்டிக்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம்நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாட்டு மக்களின் ரத்த சோகை மற்றும் நுண்ணூட்டச்சத்து குறைபாட்டைப் போக்குவதற்காக “இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பொதுவிநியோக முறை (டிடிபிஎஸ்-TPDS), பிற நலத்திட்டங்கள், ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுசேவை (ஐசிடிஎஸ்-ICDS), அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முழுவதும் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குதல்” என்ற பெயரில் முன்முயற்சிமேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து, 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு, அரிசி செறிவூட்டும் முயற்சியை 2024-ம் ஆண்டுமார்ச் மாதத்துக்குள் நாடு முழுவதும் 3 கட்டங்களில் படிப்படியாக செயல்படுத்த முடிவு செய்தது. 3 கட்டங்களும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு, அரசின் அனைத்து திட்டங்களிலும் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குவதற்கான இலக்கு 2024-ம்ஆண்டு மார்ச் மாதத்துக்குள் எட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், 2019 மற்றும் 2021-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் நடத்தப்பட்ட தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் படி, ரத்த சோகை குறைபாடு நமது நாட்டில் ஒரு பரவலான பிரச்சினையாக உள்ளது.

இது பல்வேறு வயது மற்றும்வருமான நிலைகளில் உள்ள குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்களை பாதித்து வருகிறது. மேலும் அவர்களுக்கு இரும்புச்சத்து குறைபாட்டை தவிர, வைட்டமின் பி 12,ஃபோலிக் அமிலம் போன்ற பிறவைட்டமின், தாதுப் பற்றாக்குறைகளும் உள்ளன.

மக்களின் ரத்த சோகை மற்றும்நுண்ணூட்டச்சத்து குறைபாட்டை போக்குவதற்கு உணவு செறிவூட்டல் திட்டம் உலகளவில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. நமதுநாட்டின் சூழலில் அரிசி நுண்ணூட்டச் சத்துகளை வழங்குவதற்கான ஒரு சிறந்த வழியாக இது திகழ்ந்து வருகிறது.

ஏனெனில் நாட்டிலுள்ள மக்கள் தொகையில் 65 சதவீத மக்கள், அரிசியை பிரதான உணவாக உட்கொண்டு வருகின்றனர். அரிசிசெறிவூட்டல் என்பது இந்தியஉணவுப் பாதுகாப்பு மற்றும் தரஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட தரங்களின்படி, இரும்பு, ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி 12 போன்ற நுண்ணூட்டச் சத்துக்களை வழக்கமான அரிசியில் செறிவூட்டுவதாகும். அரிசி செறிவூட்டும் முன்முயற்சி, பிரதமரின் ஏழைகள் நல்வாழ்வு உணவு திட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய அரசின் 100% நிதியுதவியுடன் மத்திய அரசின் முயற்சியாக தொடரும்.

இந்த திட்டத்தின் கீழ் தற்போது ஏழைகளுக்கு இலவச செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட்டு வருகிறது. பொதுவிநியோகமுறை (ரேஷன்), ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவை (ஐசிடிஎஸ்) திட்டங்களின்கீழ் இவை ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டமானது ரூ.17,082 கோடி செலவில் தொடர்ந்து செயல்படுத்தப்படும். இந்த திட்டம் 2028-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை தொடரும்.

உள்கட்டமைப்பு: மேலும், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் எல்லைப் பகுதிகளில், உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் ரூ.4,406 கோடி முதலீட்டில் 2,280 கிலோமீட்டர் தூரத்துக்குசாலைகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நாட்டின் பிற பகுதிகளைப் போல, அனைத்து வசதிகளுடன் எல்லைப் பகுதிகளை மேம்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தும் நோக்கத்துடன் இந்த திட்டம்செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையின் இந்த முடிவு, சாலை மற்றும் தொலைத்தொடர்பு இணைப்புகள், குடிநீர் விநியோகம், சுகாதாரம், கல்வி போன்ற வசதிகளை உருவாக்குவதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இது கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, பயணத்தை எளிதாக்குவதுடன், எல்லைப் பகுதிகளை, நெடுஞ்சாலைகளுடன் இணைப்பதை உறுதி செய்யும்.

கடல்சார் பாரம்பரிய வளாகம்: மேலும் குஜராத்தின் லோத்தால் பகுதியில் தேசிய கடல்சார்பாரம்பரிய வளாகம் (என்எம்எச்சி) அமைப்பதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்மூலம் 22 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். பல்வேறு கட்டங்களாக இந்த என்எம்எச்சி மேம்படுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.