`நான் இறந்துட்டேன்!' – காதலனுடன் தப்பிச் செல்ல அப்பாவி யாசகரை எரித்துக்கொன்ற பெண்

குஜராத்தில் ஏற்கெனவே திருமணமான 27 வயது பெண், யாசகர் ஒருவரை எரித்துக் கொன்றுவிட்டு, தான் தற்கொலை செய்துகொண்டதுபோல பிம்பத்தை உருவாக்கி தனது காதலனுடன் தப்பியோடியிருக்கிறார்.

இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. போலீஸாரின் தகவலின்படி, திருமணமான பெண்ணின் பெயர் ராமி கேசரியா என்றும், அவரின் காதலனின் பெயர் அனில் கங்கல் என்று தெரியவந்திருக்கிறது. மேலும், இந்த சம்பவமானது கட்ச் பகுதியில் மூன்று மாதங்களுக்கு முன்பே நடந்திருக்கிறது.

எரித்துக் கொலை

சரியாக ஜூலை 5-ம் தேதி, ராமி தனது மாமியார் வீட்டருகே தன்னுடைய காதலனுடன் சேர்ந்து அப்பாவி யாசகரைக் கழுத்தை நெரித்துக் கொன்று, தீயிட்டு எரித்தார். தான் தற்கொலை செய்துகொண்டதாகப் பலரை நம்ப வைப்பதற்காக, ராமி தனது செல்போனையும், காலணியையும் சடலத்துடன் எரிக்கப்பட்ட மரக்கட்டைகளுக்கு அருகில் வைத்துச் சென்றுவிட்டார். அதன்பின்னர், ராமியும் அவரது காதலனும் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டனர். இறந்தது ராமிதான் எனப் பலரும் நம்பிவிட்டனர்.

கைது

இது நடந்து சுமார் மூன்று மாதங்கள் ஆன நிலையில், குற்ற உணர்ச்சியில் மூழ்கிய ராமி, செப்டம்பர் 29 அன்று தனது தந்தையிடம் உண்மையைக் கூறிவிட்டார். அதைத்தொடர்ந்து, இந்த உண்மையை போலீஸாரிடம் ராமியின் தந்தை தெரிவித்தார். இந்த நிலையில்தான், நேற்றைய தினம் இருவரையும் போலீஸார் கைதுசெய்தனர். தற்போது அடுத்தகட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.