“தமிழக அரசு மெத்தனப் போக்கு இல்லாமல் கவனமாக செயல்பட வேண்டும்” – ஹெச்.ராஜா

உதகை: “மழை நிவாரணப் பணிகளில் தமிழக அரசு மெத்தனப் போக்கு இல்லாமல் கவனமாக செயல்பட வேண்டும்” என பாஜக ஒருங்கிணைப்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.

உதகையில் பாஜகவின் தீவிர உறுப்பினர் சேர்க்கைக்கான பயிலரங்கம் மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமையில் இன்று (அக்.15) நடைபெற்றது. இதில், மாநில ஒருங்கிணைப்பாளர் ஹெச்.ராஜா கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: “தமிழகத்தில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. சென்னையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது. மழைநீர் வடிகால் அமைக்க கொடுக்கப்பட்ட ரூ.4000 கோடியில் 90 சதவீதம் செலவு செய்து விட்டோம் என்றார்கள்.

பின்னர் 40% என்றார்கள். ஆனால் ஓராண்டுக்கு பிறகு மீண்டும் அதே நிலைமை ஏற்பட்டுள்ளது. மழை நீர் வடிந்து போகவில்லை. கார் நிறுத்த முடியவில்லை மக்கள் மேம்பாலத்தில் கார்களை பாதுகாப்பாக நிறுத்தினால் அபராதம் விதிக்கிறார்கள். இது தவறு. தமிழக அரசு மெத்தனப் போக்கு இல்லாமல் கவனமாக செயல்பட வேண்டும். சென்னையில் விமான கண்காட்சி நடந்த போது ஐந்து பேர் உயிரிழந்தனர்.

250 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உத்தரபிரதேசத்தில், இந்த காட்சி நடந்த போது இது போன்ற சம்பவம் நடைபெறவில்லை. துணை முதல்வர், மத்திய அரசு குறித்து தவறான தகவல் கொடுத்து வருகிறார். ரயில்வே அமைச்சர் சரியாக செயல்படவில்லை என்கிறார். அவர் உண்மைகளை பேச வேண்டும். 2014 ஆண்டு முன் ஆண்டுக்கு சராசரியாக 171 விபத்துகள் நடந்துள்ளன. ஆனால், 2015 முதல் 2023 வரை ஆண்டு சராசரி விபத்து வெறும் 71 தான். இந்தியாவில் பாஜக வந்த பிறகு பட்டினி சாவு கிடையாது. தமிழகம் முழுவதும் வெடிகுண்டு புரளி அதிகரித்து வருகிறது.

ஆனால் போலீஸார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. பயங்கரவாதிகளையும், தீவிரவாதிகளையும் அரசு கண்டுகொள்ளவில்லை. ஆனால் கொடி ஏற்று பவரையும், எதிர் கருத்து கூறுபவர்களையும் கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். போலீஸார் சரியாக செயல்படாமல் மதம் பார்த்து எப்.ஐ.ஆர் பதிவு செய்கின்றனர். மத்திய அரசு எந்த திட்டத்தையும் முடக்கி வைக்கவில்லை. மத்திய அரசின் திட்டங்களை மறைத்து கெட்ட பெயர் ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள்” என தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.