பெய்ரூட் தெற்கு புறநகர் பகுதிகளில் வான்வழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல்

பெய்ரூட்,

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் தடை செய்யப்பட்ட ஹிஸ்புல்லா அமைப்பு, ஈரான் ஆதரவுடன் லெபனானில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. காசாவில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நடந்து வரும் போரில், ஹமாஸ் அமைப்புக்கு ஹிஸ்புல்லா ஆதரவு தெரிவித்துள்ளது. அதோடு இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் தொடர்ந்து ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதற்கு பதிலடியாக லெபனானில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக லெபனானில் சுமார் 12 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில், லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கில் உள்ள புறநகர் பகுதிகள் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இது தொடர்பான தகவல்கள் லெபனான் அரசு ஊடகத்தில் வெளியாகியுள்ளன.

இதற்கு முன்னதாக கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை லெபனானில் உள்ள கானா நகரின் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலில் 10 பேர் உயிரிழந்ததாகவும், 15 பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், கானா தாக்குதலில் உயரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 15 ஆக அதிகரித்துள்ளதாக லெபனான் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.