வடக்கு நோக்கி நகர்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: ஆந்திராவில் கனமழை

சென்னை: தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு-வடமேற்கு திசையில் மணிக்கு 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதால் தெற்கு ஆந்திராவில் மழை பாதிப்பு அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு-வடமேற்கு திசையில் மணிக்கு 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 360 கி.மீ தொலைவில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு தமிழ்நாடு – தெற்கு ஆந்திரா இடையே நாளை (அக்.17) கடற்கரையை கடக்க வாய்ப்புள்ளது.

மழை எச்சரிக்கை: இதன் காரணமாக, சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த ரெட் அலர்ட் திரும்பப் பெறப்படுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இன்றும் நாளையும் வட உள் தமிழகத்தில் குறிப்பிட்ட சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. தென்தமிழகத்தில் அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இன்றும், நாளையும் தெற்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் ராயலசீமா பகுதிகளில், கனமழை முதல் மிகக் கனமழை பெய்யும். பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கேரளா மற்றும் தெற்கு உள் கர்நாடகாவின் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையும், கனமழை முதல் மிக கனமழை வரையும் பெய்யும். இன்று, கேரளா மற்றும் தெற்கு உள் கர்நாடகத்தில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.

கடல் நிலை: தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக் கடலில் கடல் சீற்றத்துடனும், மிகக் கொந்தளிப்பாகவும் இருக்கும். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரப் பிரதேசக் கடற்கரையோரங்களில் நாளை மதியம் வரை இத்தகைய நிலை இருக்கும். பின்னர், படிப்படியாக கடல் சீற்றம் குறையும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக் கடலில் நாளை வரை மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடலுக்குச் சென்ற மீனவர்கள் கரைக்குத் திரும்புமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆந்திர அரசு முன்னெச்சரிக்கை: வானிலை மாற்றம் காரணமாக தற்போது சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள மாவட்டங்களில் மழைப் பொழிவு குறைந்துள்ளது. சில பகுதிகளில் பல மணி நேரங்களாக மழை இல்லை. அதேநேரத்தில், ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால், ஆந்திர அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக பிரகாசம் மாவட்டத்தில் 101 கர்ப்பிணி பெண்கள் பாதுகாப்பு கருதி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இதனை மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

நெல்லூர் மற்றும் திருப்பதி மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் 20 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது. இதையடுத்து, நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருமாறு முதல்வர் அலுவலகத்துக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. ஐடி பணியாளர்கள் உள்பட பலர், வீட்டில் இருந்தபடி பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.