இந்தியாவை 46ல் பொட்டலம் செய்த நியூசி, 5 பேர் டக்அவுட் – படு கேவலமான பேட்டிங்

India First Innings Score : நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இந்தியா வந்திருக்கிறது. இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்கிறது. முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. டாஸ் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். அண்மையில் வங்கதேச கிரிக்கெட் அணியை வீழ்த்திய தெம்புடன் இந்திய அணி இப்போட்டியில் களம் கண்டது. கேப்டன் ரோகித் இப்போட்டியிலாவது நல்ல தொடக்கத்தை கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெறும் 2 ரன்களுக்கு அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். 

இந்தியாவின் மோசமான பேட்டிங்

அவரைத் தொடர்ந்து களம் புகுந்த விராட் கோலி 9 பந்துகள் விளையாடி ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகி வெளியேறினார். அடுத்தடுத்து இரண்டு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அவுட்டானதால் இந்திய அணி சிக்கலில் சிக்கியது. அடுத்து வந்த சர்பிராஸ்கான் டக்அவுட் ஆக, யஷஸ்வி ஜெய்ஷ்வால் 13 ரன்களுக்கு அவுட்டானார். அதன்பிறகு வந்த எந்த பிளேயரும் நிலைத்து நிற்கவில்லை. வந்ததும் அவுட்டாவதுமாக வெளியேறிக் கொண்டிருந்தனர். கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய மூன்று பேரும் ஒரு ரன் கூட எடுக்காமல் டக் அவுட்டாகி பெவிலியனுக்கு வந்த வேகத்தில் சென்றனர். மிடில் ஆர்டரில் ரிஷப் பந்த் மட்டும் 20 ரன்கள் எடுக்க கடைசி கட்டத்தில் களமிறங்கிய குல்தீப் 2, பும்ரா 1, சிராஜ் 4 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். அதாவது, 46 ரன்களுக்கு இந்திய அணி பொட்டலமானது. 

5 இந்திய பிளேயர்கள் டக்அவுட்

இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கில் மட்டும் 5 பேர் டக் அவுட்டானார்கள். இந்திய அணிக்கு இந்தியாவில் ஆடிய டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் எடுத்த மிக மோசமான ஸ்கோராவும் பதிவானது. இந்திய அணிக்கு ஒட்டுமொத்தமாக மூன்றாவது மோசமான ஸ்கோராகும். இதற்கு முன்பு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அடிலெய்டில் நடந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 36 ரன்களுக்கு ஆல்அவுட்டாகியிருக்கிறது. 1974 ஆம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 42 ரன்களுக்கு இந்தியா ஆல்அவுட்டாகியிருக்கிறது.  

நியூசிலாந்து அணி மாஸ் பவுலிங்

இந்திய அணியை பொட்டலமாக்கியதில் நியூசிலாந்து அணியின் இரண்டு பவுலர்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. மாட் ஹென்றி, வில்லியம் ஓ’ரூர்க் ஆகிய இருவரும் இந்திய அணியை ஒட்டுமொத்தமாக சிதைத்துவிட்டனர். இவர்களின் இருவர் மட்டும் மொத்தம் 9 விக்கெட்டுகளை அள்ளினர். மாட் ஹென்றி 5 விக்கெட்டுகளையும், வில்லியம் ஓ ரூர்க் 4 விக்கெட்டுகளையும் எடுத்தனர். டிம் சவுதி ஒரு விக்கெட்டை எடுத்தார்.

நியூசிலாந்து முதல் இன்னிங்ஸ் பேட்டிங்

இதனைத் தொடர்ந்து நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸ் பேட்டிங் ஆடத் தொடங்கியது. அந்த அணியில் ஓப்பனிங் இறங்கிய டெவோன் கான்வே அற்புதமாக ஆடி அரைசதம் அடித்தார். டாம் லாதம் 15 ரன்களுக்கு அவுட்டானாலும், டெவோன் கான்வே பேட்டிங்கை பார்க்கும்போது இந்த பிட்சிலா? இந்திய அணி இவ்வளவு மோசமாக ஆடியது என நினைக்க தோன்றியது. ஏனென்றால் அவர் எதிர்கொண்ட பந்துகளை எல்லாம் அதிரடியாக பவுண்டரிக்கும், சிக்சருக்கும் விளாசிக் கொண்டிருந்தார். நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸை தொடர்ந்து ஆடிக் கொண்டிருக்கிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.