இந்திய தூதகரத்தை மூட வலியுறுத்தி கனடாவில் சீக்கிய அமைப்புகள் பேரணி

ஒட்டாவா:

இந்தியா மற்றும் கனடா இடையே பல ஆண்டு கால நட்புறவு உள்ளது. இந்த உறவு கடந்த ஆண்டில் இருந்து கசப்பானதாக மாறி வருகிறது. இதற்கு காரணம் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் வைத்து கொல்லப்பட்டது ஆகும். இந்த விவகாரத்திற்கு பின்னால் இந்திய அரசுதான் இருப்பதாக கனடா பிரதமர் திட்டவட்டமாக குற்றம்சாட்டி இருந்தார். இதனால் இந்தியா – கனடா இடையேயான உறவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு விரிசல் ஏற்பட்டுள்ளது.

கனடா பிரதமரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து, இந்தியாவில் உள்ள கனடா தூதா் உள்ளிட்ட 6 அதிகாரிகள் வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது. இதற்கு பதிலடி நடவடிக்கையாக கனடாவுக்கான இந்திய தூதா் உள்பட கனடாவிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகள் உடனடியாக வெளியேற கனடா அரசு உத்தரவிட்டுள்ளது இந்தியாவுடனான உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு அவரது கட்சிக்குள்ளேயே நெருக்கடி அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான கனடா அரசின் நடவடிக்கைகளை அங்குள்ள சீக்கிய அமைப்புகள் வரவேற்றுள்ளன. மேலும், கனடாவில் உள்ள இந்திய தூதரகங்களை நிரந்தரமாக மூட சீக்கிய அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. .கனடாவின் வான்கோவெர் பகுதியில் அமைந்துள்ள இந்திய தூதரக அலுவலகம் முன் வான்கோவெரைச் சேர்ந்த சீக்கிய சமூகத்தினர் நேற்று பேரணியாகச் சென்று வான்கோவெரிலுள்ள இந்திய தூதரக அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தின்போது, வான்கோவெர் மற்றும் டோரண்டோவில் உள்ள இந்திய தூதரகங்களை நிரந்தரமாக மூட சீக்கிய அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.