`சிதம்பரம் தீட்சிதர்கள் கடவுளை விட மேலானவர்களா? ஆணவம் நல்லதல்ல…’ – காட்டமான உயர் நீதிமன்றம்!

சிதம்பரம்: `தீட்சிதர்கள் ஆணவத்துடன் நடந்து கொள்வது நல்லதல்ல!’ – நீதிமன்றம் கடுகடுத்த பின்னணி

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஜெயசீலா என்ற பெண் பக்தை ஒருவரை கனகசபை மீது அழைத்துச் சென்றதற்காக, தர்ஷன் (எ) நடராஜர் தீட்சிதரையும், அவரது அப்பா கணேசன் தீட்சிதரையும், கோயிலில் பணி செய்யக் கூடாது என்று தடை விதித்தது தீட்சிதர் குழு. அதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் புகாரளித்தனர் தர்ஷன் மற்றும் கணேசன் தீட்சிதர்கள். அதையடுத்து அந்த இருவரையும் நீக்கியது குறித்து தீட்சிதர்கள் தரப்பு விளக்கத்தைக் கேட்க, அவர்களுக்கு அழைப்பு விடுத்தார், கடலூர் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரணிதரன். ஆனால் அதனை ஏற்க மறுத்த தீட்சிதர்கள், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி இது தீட்சிதர்களுக்கு சொந்தமான கோயில் என்றும், அதில் இந்து சமய அறநிலையத்துறை தலையிடுவதற்கு உரிமை இல்லை என்றும் பதில் அனுப்பியது தீட்சிதர் தரப்பு.

சிதம்பரம் நடராஜர் கோயில்

அதையடுத்து, இரண்டு தீட்சிதர்களை நீக்கியதற்கு சரியான காரணம் சொல்லப்படாததுடன், அவர்களின் விளக்கத்தைக் கேட்கவில்லை என்று குறிப்பிட்ட கடலூர் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர், தீட்சிதர்கள் கொடுத்த தடை ஆணையை நீக்கினார். அத்துடன் கடந்த 2023-ம் ஆண்டு அந்த இரண்டு தீட்சிதர்களும் பணியில் சேரலாம் என்றும் உத்தரவிட்டிருந்தார். ஆனால் அதன்பிறகும் தர்ஷன் தீட்சிதரை பணியில் சேர்த்துக்கொள்ள மறுத்தது தீட்சிதர் தரப்பு. அதையடுத்து, சரியான காரணமின்றி தீட்சிதர்கள் குழு தன்னை பணியிலிருந்து நீக்கிவிட்டதாக, கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார் தர்ஷன்.

அந்த விசாரணை நிலுவையில் இருக்கும் நிலையில், தர்ஷனை பணியில் சேர்த்துக் கொள்ளும்படி 2023-ம் ஆண்டு இந்து அறநிலையத்துறை அனுப்பிய உத்தரவை, ரத்து செய்ய வேண்டும் என்றும், இந்து அறநிலையத்துறை தங்களை கட்டுப்படுத்த முடியாது என்றும், கடந்த 16-ம் தேதி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது தீட்சிதர் தரப்பு. அந்த மனு இன்று நீதிபதி தண்டபாணி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதி, “நடராஜர் கோவில் தீட்சிதர்களால் எனக்கும் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. மனக் கஷ்டங்களை போக்க வரும் மக்கள் அவமானப்படுத்தப்படுகின்றனர். தீட்சிதர்கள் ஆணவத்துடன் நடந்து கொள்வது நல்லதல்ல.

சென்னை உயர் நீதிமன்றம்

தீட்சிதர்கள் கடவுளுக்கு மேலானவர்களா ? உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு, கோயில் தங்களுக்கு சொந்தமானது என தீட்சிதர்கள் நினைக்கின்றனர். பக்தர்கள் வரும் வரைதான் அது கோயில். இல்லாவிட்டால் கோயில் பாழாகி விடும். கோவிலுக்கு வருபவர்கள் அனைவரும், சண்டைக்கு வருவதைப் போலவே தீட்சிதர்கள் நினைக்கின்றனர். காசு கொடுத்தால்தான் அங்கு பூ கிடைக்கும். இல்லையென்றால் விபூதி கூட கிடைக்காது’ என்று கடுகடுத்த நீதிபதி, பொது தீட்சிதர்கள் குழு தாக்கல் செய்த மனுவுக்கு, வரும் அக்டோபர் 21-ம் தேதிக்குள் பதிலளிக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.