நில முறைகேடு வழக்கு: சித்தராமையாவின் மைத்துனர் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை

பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா மீதான நில முறைகேடு விவகாரத்தில் அவரது மைத்துனரின் வீடு, மைசூரு நகர மேம்பாட்டு கழக அலுவலகம் ஆகியவற்றில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோத‌னை நடத்தினர்.

கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்தியதற்காக, மைசூரு மாநகர மேம்பாட்டு கழகம் அவருக்கு மாற்று நிலம் ஒதுக்கியது. கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பை விட,மாற்றாக வழங்கப்பட்ட நிலத்தின் மதிப்பு பன்மடங்கு அதிகமாக இருந்ததால் சித்தராமையா மீது நில‌முறைகேடு வழக்கு தொடரப்பட்டது. அமலாக்கத்துறையும், லோக்ஆயுக்தா போலீஸாரும் இவ்வழக்கை விசாரித்து வருகின்றனர்.

இதையடுத்து, சித்தராமையாவின் மனைவி அந்த நிலத்தை மைசூரு மாநகர மேம்பாட்டு கழகத்திடம் ஒப்படைத்தார். இருப்பினும் பாஜக, மஜத ஆகிய எதிர்க்கட்சியினர் சித்தராமையா முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சித்தராமையாவின் மைத்துனர் தேவராஜின் வீட்டில் சோதனை நடத்தினர். 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சுமார் 6 மணி நேரம் அவரது வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது மைசூரு மாநகர மேம்பாட்டு கழகம் கையகப்படுத்திய நிலத்தின் பத்திரங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே அமலாக்கத் துறையின் மற்றொரு குழுவைச் சேர்ந்த அதிகாரிகள் மைசூரு மாநகர மேம்பாட்டு கழகத்தின் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். அதன் தலைவராக இருந்த மரிகவுடா ராஜினாமா செய்ததால், அவரது அலுவலகத்தையும் சோதனையிட்டனர். மேலும், மைசூரு மாநகர மேம்பாட்டு கழகம், இவ்வழக்கில் விளக்கம் அளிக்கக் கோரும் சம்மனை வழங்கினர்.

அதில், மாற்று நிலம் ஒதுக்கிய விவகாரத்தில் சித்தராமையாவின் தலையீடு இருந்ததா? அந்த 14 மனைகளை தேர்வு செய்தது யார்? என்பது போன்ற 41 கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன. 5 மணி நேர தீவிர சோதனைக்கு பிறகு, அமலாக்கத்துறை அதிகாரிகள் சில ஊழியர்களிடமும் விசாரணை நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அமலாக்கத் துறை சோதனையால் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.