‘புழல் சிறையில் உணவு சரியில்லை’ – தனிமை சிறையில் உள்ள விசாரணை கைதியை மீட்கக் கோரி வழக்கு

சென்னை: புழல் சிறையில் உணவு சரியில்லை என புகார் அளித்த விசாரணை கைதியை தனிமை சிறையி்ல் அடைத்து வைத்திருப்பதாகவும், எனவே அவரை மீட்கக்கோரியும் தொடரப்பட்ட வழக்கில், சிறைத்துறை நிர்வாகம் ஒரு வாரத்தில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “தேசிய புலனாய்வு முகமை பதிவு செய்த வழக்கில் விசாரணை கைதியாக எனது உறவினர் புஷ்பராஜ் என்பவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புஷ்பராஜ் புகார் அளித்துள்ளதாகக்கூறி, ஆத்திரமடைந்த சிறைத்துறை அதிகாரிகள் புஷ்பராஜை தனிமை சிறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்து வருவதாக தெரிகிறது.

எனவே புஷ்பராஜை தனிமை சிறையி்ல் அடைக்கவோ, ஆபாச வார்த்தைகளால் பேசவோ கூடாது என சிறைத்துறை நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும்” என அதில் கோரியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ். நதியா ஆஜராகி வாதிட்டார். அதையடுத்து நீதிபதிகள், இதுதொடர்பாக புழல் சிறைத்துறை நிர்வாகம் ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.