பெண்கள் டி20 உலகக்கோப்பை; தென் ஆப்பிரிக்காவுக்கு 159 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து

துபாய்,

9-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 3-ந் தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து (ஏ பிரிவு), வெஸ்ட்இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா (பி பிரிவு) அணிகள் தங்கள் பிரிவில் முறையே ‘டாப்-2’ இடங்களை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து, வங்காளதேசம், ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறின.

முதலாவது அரையிறுதியில் தென்ஆப்பிரிக்கா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியும், 2-வது அரைஇறுதியில் நியூசிலாந்து 8 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணியை வீழ்த்தியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்நிலையில், நியூசிலாந்து – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுசி பேட்ஸ் மற்றும் ஜார்ஜியா ப்ளிம்மர் ஆகியோர் களம் இறங்கினர். இதில் ஜார்ஜியா ப்ளிம்மர் 9 ரன்னிலும், அடுத்து வந்த சோபி டெவின் 6 ரன்னிலும், சுசி பேட்ஸ் 32 ரன்னிலும் அவுட் ஆகினர்.

இதையடுத்து அமெலியா கெர் மற்றும் ப்ரூக் ஹாலிடே ஜோடி சேர்ந்தனர். இருவரும் அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இதில் ப்ரூக் ஹாலிடே 38 ரன்னிலும், அமெலியா கெர் 43 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து மேடி கிரீன் மற்றும் இசபெல்லா கேஸ் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர்.

இறுதியில் நியூசிலாந்து 20 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 158 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் அமெலியா கெர் 43 ரன், ப்ரூக் ஹாலிடே 38 ரன் எடுத்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் நோன்குலுலேகோ ம்லபா 2 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 159 ரன் எடுத்தால் சாம்பியன் பட்டம் வெல்லலாம் என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா ஆட உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.