லடாக் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் மீண்டும் ரோந்து: இந்தியா – சீனா இடையே உடன்பாடு

புதுடெல்லி,

இந்தியா- சீனா இடையே எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் இருநாட்டு ராணுவ வீரர்கள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. அருணாசல பிரதேசத்தை உரிமை கொண்டாடும் சீனா அவ்வப்போது எல்லையில் அத்துமீறுகிறது. இதுபோன்ற காரணங்களால் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில், கிழக்கு லடாக்கில் உள்ள அசல் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் மீண்டும் ரோந்து செல்வதற்கு இந்தியா – சீனா இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து வெளியுறவு செயலாளர் கூறுகையில், “இந்தியா – சீனா இடையே எஞ்சியுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக இரு நாட்டின் பிரதிநிதிகளும் கடந்த சில நாட்களாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவந்தனர். அதன் விளைவாக இந்தியா – சீனா இடையே இருக்கும் உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டு கோடு வழியாக ரோந்து செல்வதற்கான உடன்பாடு எட்டப்பட்டுள்ளது” என்றார்.

ரஷியாவில் நடக்கும் 16-வது பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்வதற்கு ஒரு நாளைக்கு முன்பாக இந்த அறிவிப்பு வந்துள்ளது. பிரிக்ஸ் உச்சி மாநாட்டின்போது, பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.