பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல்: வாகனத்தை மேம்பாலத்திலேயே நிறுத்திவிட்டு நடந்து சென்ற மக்கள்

பெங்களூரு: கர்நாடக மாநில தலைநகரான பெங்களூருவில் புதன்கிழமை (அக்.23) இரவு பலத்த மழை பதிவானது. இதையடுத்து எலக்ட்ரானிக் சிட்டியின் மேம்பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட நேரம் நகராமல் ஸ்தம்பித்து நின்ற சூழலில் அதில் பயணித்த மக்களில் சிலர் நடந்தே வீடு திரும்பினர்.

சாலைகளில் மழை நீர் தேங்கி நிற்க, வாகனங்கள் அப்படியே அதில் நின்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் கவனம் பெற்றுள்ளது. அது சினிமா பட காட்சி போல இருந்ததாக சமூக வலைதள பயனர்கள் கமெண்ட் செய்துள்ளனர். இந்தியாவின் டெக் தலைநகராக அறியப்படும் பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருப்பது வழக்கம். இந்நிலையில், மழை நேரங்களில் அது இயல்பை விடவும் அதிகம் இருக்கும்.

இந்த போக்குவரத்து நெரிசலால் பெங்களூரு நகர பகுதியில் ஆயிரக்கணக்கான மோட்டார் வாகனங்கள் சுமார் மூன்று மணி நேரம் வரை ஸ்தம்பித்து நின்றன. அதில் பயணித்த மக்களும் வாகனத்துக்குள் முடங்கினர். சிலர் வாகனத்தை சாலையில் அப்படியே நிறுத்திவிட்டு நடந்து சென்றனர்.

ரூபானா அக்ரஹாராவில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் தமிழகம் மற்றும் பெங்களூரு நகரை இணைக்கும் டெக் வழித்தடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் மேம்பாலத்தின் ஒரு பக்கத்தை பெங்களூரு போக்குவரத்து போலீஸார் தற்காலிகமாக தடை விதித்தனர். மேலும், வியாழக்கிழமை காலை வரை நகரின் சில பகுதிகளில் மழை நீர் வடியாமல் அப்படியே தேங்கி நிற்கும் சூழலும் நிலவியது.

இந்நிலையில், போக்குவரத்து நெரிசலில் சிக்கியவர்கள் சமூக வலைதளத்தில் தாங்கள் எதிர்கொண்ட சிரமத்தை பகிர்ந்தனர். ‘தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் என மாநில அரசு அறிவுறுத்தி இருந்தது. அதை தனியார் நிறுவனங்கள் பின்பற்றாதது ஏன்?’, ‘நான்கு சக்கர வாகனம் மட்டுமல்லாது இருசக்கர வாகனத்தில் சென்றாலும் இதே நிலைதான்’, ‘அலுவலகத்தில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வீட்டுக்கு வழக்கமாக ஒன்றரை மணி நேரத்தில் செல்வேன். ஆனால், அந்த நேரம் கடந்தும் இன்னும் நான் வீட்டுக்கு செல்லவில்லை’ என போக்குவரத்து நெரிசலில் சிக்கியவர்கள் தெரிவித்தனர். சிலர் எலக்ட்ரானிக் சிட்டி வழியாக பயணம் செய்வதை தவிர்க்குமாறு தெரிவித்திருந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.