மராட்டிய சட்டசபை தேர்தல்: வாகன சோதனையில் ரூ.52 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

மும்பை,

மராட்டியத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் 20ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. பாஜக, காங்கிரஸ், சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே தரப்பு), சிவசேனா (உத்தவ் தாக்கரே தரப்பு), சமாஜ்வாதி, ஆம் ஆத்மி உள்பட பல்வேறு கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து மராட்டிய மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்தது. இந்நிலையில், மராட்டிய மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் ரூ.52 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மும்பை புறநகர், நாக்பூர் மற்றும் ரத்னகிரி மாவட்டங்களில் காவல்துறை, வருமான வரித்துறை, வருவாய் புலனாய்வு, போதைப்பொருள் தடுப்புப்பிரிவு, சுங்கம் மற்றும் கலால் ஆகிய துறையினர் மேற்கொண்ட சோதனையில் ரூ.52 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தேர்தல் ஆணையத்தின் செயலி மூலம் இதுவரை 1,144 தேர்தல் விதிமுறை மீறல் புகார்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் 99 சதவீத புகார்கள் தீர்க்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.