100 அடியில் கொடிக் கம்பம், 600 எல்இடி திரைகள், செல்போன் டவர்… – விஜய்யின் தவெக மாநாடு ஏற்பாடுகள் எப்படி?

விழுப்புரம்: விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாடு ஞாயிற்றுக்கிழமை (அக்.27) நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கட்சியின் தலைவர் விஜய், 100 அடி உயர கம்பத்தில் கட்சிக் கொடியை ரிமோட் மூலம் ஏற்றி வைக்கவுள்ளார். அதற்காக வெள்ளிக்கிழமை பகல் 12:30 மணி அளவில் மாநாட்டு முகப்பில் விழுப்புரத்தைச் சேர்ந்த மணி என்பவருக்கு சொந்தமான இடம் 225 சதுர அடியை ஐந்து ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்து, அதில் 100 அடி உயர கொடிக் கம்பம் நடப்பட்டது.

தவெக மாநாட்டு மேடையில் இருந்து நடுவே அமைக்கப்பட்டுள்ள ரேம்பில் நடந்து வந்து கட்சிக் கொடியை நடிகர் விஜய் ரிமோட் மூலம் ஏற்றி வைக்கவுள்ளார். மாநாட்டின் மேடை அருகே இணையதள வசதிக்காக தனியார் கம்பெனியின் செல்போன் டவர் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மாநாடு ஏற்பாட்டின் இறுதிக்கட்ட பணிகளாக மாற்றுத் திறனாளிகள் அமர தனி இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த மாநாட்டு நிகழ்வுகளை பார்வையாளர்கள் பார்க்கும் வகையில் 600 பெரிய எல்இடி திரைகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டு வருகின்றன.

மாநாட்டுக்கு இளைஞர்கள், பெண்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், கட்சித் தொண்டர்கள் என 2 லட்சம் பேர் வரை வருவார்கள் என எதிர்பார்த்து, அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸார் செய்து வருகின்றனர். மாநாட்டில் வரும் தொண்டர்களுக்கு உணவு வழங்க சமையல் கலைஞர்கள் குழுவினர்கள் வி.சாலையில் உள்ள திருமண மண்டபத்துக்கு வந்துள்ளனர். மாவட்ட நிர்வாகிகள் மாநாட்டு பணிக்காக ஒருநாள் முன்னதாகவே தாங்கள் ஏற்கெனவே புக் செய்த ஓட்டல் அறைகளில் வந்து தங்க ஆரம்பித்தனர்.

மாநாட்டு திடலில் நடப்பட்ட செல்போன் டவர்

இதனிடைய, விக்கிரவாண்டி அடுத்த சித்தணி தனியார் கல்லூரியில், மாநாட்டு பாதுகாப்பு பணிகள் குறித்து வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் விழுப்புரம் சரக டிஐஜி திஷா மிட்டல், எஸ்பி தீபக் ஸ்வாட்ச் உயர் மட்ட அளவிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் அரசு, தனியார் பேருந்துகளை மட்டும் திண்டிவனம் – விழுப்புரம் சாலையில் அனுமதிப்பது என்றும், வேன், கார்கள், ஆம்னி பஸ்கள் கூட்டேரிப்பட்டு, திருக்கனுர் வழியாக முண்டியம்பாக்கத்தில் இணையும்படி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கனரக வாகனங்களான லாரிகள், ட்ராஸ் லாரிகள் திண்டிவனம் – புதுச்சேரி வழியாக கடலூர் சென்று அங்கிருந்து பண்ருட்டி உளுந்தூர்பேட்டை வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லவும் , சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்பவர்கள் கிழக்கு கடற்கரை சாலையை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும், விழுப்புரத்திலிருந்து – திண்டிவனம் செல்லும் சாலையை தவெக தொண்டர்கள் வரும் வாகனங்களை மட்டும் அனுமதிப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு செல்பவர்கள் விழுப்புரம் – செஞ்சி வழியாக திண்டிவனம் சென்று சென்னை செல்லும் வகையில் மாநாடு நாளன்று மட்டும் போக்குவரத்து மாற்றம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், மொத்தத்தில் 27-ம் தேதி சென்னையிலிருந்து திண்டிவனத்தை கடந்து விழுப்புரம் வழியாக செல்வதையும், தென் மாவட்டங்களிலிருந்து விழுப்புரம் வழியாக சென்னைக்கு செல்வதை தவிர்ப்பது உகந்ததாக இருக்கும் என்றும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக தெரிகிறது.

பல்லவர் எங்கே? – சேர, சோழ, பாண்டிய மன்னர்களை மாநாட்டு திடலில் பேனராக வைத்த தவெகவினர், பல்லவ மண்ணில் மாநாட்டை நடத்தும்போது பல்லவ மன்னரை தவிர்த்துள்ளது பேசும் பொருளாகியுள்ளது.

2026 என்ற இலக்கு… – இதனிடையே, விஜய் தனது கட்சித் தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “நம் கழகத்தின் முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழாவுக்காக எழுதும் மூன்றாவது கடிதம் இது. மாநாடு நிகழப் போகும் தருணம், நம் மனம் மற்றும் கள வளாகத்துக்கு வெகு அருகில் வந்துவிட்டது. உங்கள் ஒவ்வொருவரையும் நேரில் சந்திக்கப் போகும் கணங்கள், நம்மிடையே இருக்கும் அன்பின் கனத்தை இன்னும் பலமடங்கு கூட்டப் போகின்றன. அதை வார்த்தைகளில் எப்படிச் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. உச்சபட்ச அரசியல் ஒழுங்கோடு, உலகமே உற்று நோக்கிப் போற்றும் விதமாகக் கொண்டாடுவோம் நம் வெற்றிக் கொள்கைத் திருவிழாவை.

அந்தத் திருவிழாவைக் கொண்டாடுவதற்காக, பெருந்திரளாக அனைவரும் மாநாட்டுக்கு வரும்போது பாதுகாப்பையும், கட்டுப்பாட்டையும் மனதில் நிறுத்தி, பத்திரமாக வாருங்கள். நம் கழகக் கொடியைக் கைகளிலும் மனங்களிலும் ஏந்தி வாருங்கள். உங்கள் வருகைக்காக வி.சாலை எல்லையில், என் இரு கரங்களையும் விரித்தபடி, இதய வாசலைத் திறந்து வைத்துக் காத்திருப்பேன். வாருங்கள் மாநாட்டில் கூடுவோம். நம் தமிழ்நாட்டு மண்ணுக்கான வெற்றிக் கொள்கைகளைச் செயல்படுத்த உறுதிபூண்டு முழங்குவோம். 2026 என்ற இலக்கை நோக்கி, முதல் அடியை எடுத்து வைப்போம். வி.சாலை என்னும் வியூகச் சாலையில் சந்திப்போம், வெற்றி நிச்சயம்” என்று விஜய் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.