2 நாள் பயணமாக இந்தியா வரும் ஸ்பெயின் அதிபர்

ஸ்பெயின்,

ஸ்பெயின் நாட்டின் அதிபர் பெட்ரோ சான்செஸ் 2 நாள் பயணமாக நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) இந்தியா வருகிறார். பிரதமர் மோடியின் அழைப்பு ஏற்று அவர் முதல் முறையாக இந்தியா வரவுள்ளார். இந்த பயணத்தின்போது அதிபர் பெட்ரோ சான்செஸ், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிகிறது.

அதன் பின்னர் ஸ்பெயின் நாட்டின் ஏர்பஸ் நிறுவனத்துடன் இணைந்து குஜராத்தின் வதோதரா நகரில் அமைக்கப்பட்டுள்ள சி295 விமான ஆலையை மோடியும், பெட்ரோ சான்செசும் இணைந்து திறந்து வைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மோடி-பெட்ரோ சான்செஸ் சந்திப்பின்போது இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தனது 2 நாள் பயணத்தின்போது மராட்டிய தலைநகர் மும்பைக்கு செல்லும் பெட்ரோ சான்செஸ், அங்கு அதிகாரப்பூர்வ சந்திப்புகளை நடத்துவதுடன் வர்த்தக மற்றும் தொழில்துறை தலைவர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் திரைப்படத் துறையினர் ஆகியோருடன் கலந்துரையாட திட்டமிட்டுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.