IND vs NZ: இந்த காரணத்திற்காகத்தான் கேஎல் ராகுல் நீக்கப்பட்டாரா? இனிமேல் வாய்ப்பு இல்லை?

புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் (எம்சிஏ) மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. மொத்தம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வரலாற்று தோல்வியடைந்தது. பெங்களூருவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா கட்டாயம் வெற்றி பெற வேண்டும். ஒருவேளை நியூசிலாந்து அணி வெற்றி பெற்றால் கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா தனது சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழக்கும். 

எனவே எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று களமிறங்கியது. முதல் டெஸ்ட் போட்டி வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்த நிலையில், புனே மைதானம் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் முதல் டெஸ்ட் முடிந்த உடனேயே வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், 2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் பல மாற்றங்களைச் செய்துள்ளது இந்தியா. அனுபவம் வாய்ந்த வீரர் கேஎல் ராகுலை கூட வெளியேற்றி சில கடினமான முடிவுகளை எடுத்துள்ளனர். கேஎல் ராகுல் ஏன் அணியில் இருந்து நீக்கப்பட்டார் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

கேஎல் ராகுல் ஏன் நீக்கப்பட்டார்?

பெங்களூருவில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கேஎல் ராகுல் சிறப்பாக விளையாடவில்லை. முதல் இன்னிங்சில் டக் அவுட் ஆனார், அதே சமயம் இரண்டாவது இன்னிங்சில் 16 பந்துகளில் 12 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். ஒருவேளை ராகுல் சிறப்பாக விளையாடி இருந்தால் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு இருந்தது. இதுதவிர, இந்திய அணியில் டாப் 6ல் இறங்கும் பேட்டர்களில் 80க்கும் மேற்பட்ட இன்னிங்ஸ்களில் விளையாடிய மோசமான சராசரியை வைத்துள்ளார் கேஎல் ராகுல்.

மறுபுறம், முதல் டெஸ்டில் காயம் காரணமாக களமிறங்காத ஷுப்மான் கில்லுக்காக பதிலாக விளையாடிய சர்பராஸ் கான், இரண்டாவது இன்னிங்ஸில் தனது பேட்டிங் திறமையை மீண்டும் வெளிப்படுத்தினார். முக்கியமான கட்டத்தில் தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். 150 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். சர்ஃபராஸ் கான் சிறப்பான ஃபார்மில் உள்ள நிலையில், கழுத்து காயத்தில் இருந்து மீண்ட சுப்மான் கில் 2வது டெஸ்டில் மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளார். இதன் காரணமாக இரண்டாவது டெஸ்டில் விளையாடும் லெவன் அணியில் இருந்து கேஎல் ராகுல் நீக்கப்பட்டுள்ளார். கேஎல் ராகுலைத் தவிர மேலும் இரண்டு வீரர்களும் அணியில் இருந்து நீக்கப்பட்டனர். குல்தீப் யாதவ் மற்றும் முகமது சிராஜ் ஆகியோருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஆகாஷ் தீப் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய ப்ளேயிங் லெவன்:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ரிஷப் பண்ட் (விகீ), சர்பராஸ் கான், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ரவிச்சந்திரன் அஷ்வின், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.