அரசு வழித்தடத்தில் தனியார் பேருந்துகளை இயக்க எதிர்ப்பு: நவ.12-ல் தொழிற்சங்கத்தினர் ஆலோசனை

சென்னை: பண்டிகையின்போது, அரசு வழித்தடத்தில் தனியார் பேருந்துகளை இயக்கும் முடிவை கைவிட வலியுறுத்தி, முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நவம்பர் 12-ல் தொழிற்சங்கத்தினர் ஆலோசனை நடத்தவுள்ளனர்.

விழுப்புரம் போக்குவரத்துக் கழகம் சார்பில் பண்டிகையின்போது அரசு வழித்தடத்தில் தனியார் பேருந்துகள் இயக்க அனுமதித்து டெண்டர் விடப்பட்டது. இதற்கான பணிகள் முடிவுற்று, கடந்த ஆயுத பூஜையின்போது அரசு வழித்தடத்தில் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டன. வரவிருக்கும் தீபாவளிக்கும் அதேபோல் இயக்கப்பட உள்ளன. போக்குவரத்துத் துறையின் இந்த நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி முன்னெடுக்க வேண்டியவை குறித்து சிஐடியு, ஏஐடியுசி, டிடிஎஸ்எஃப், பட்டாளி தொழிற்சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் சென்னை, பெரம்பூரில் இன்று ஆலோசனை நடத்தினர்.

இது தொடர்பாக தொழிற்சங்க நிர்வாகிகள் கூறும்போது, “போக்குவரத்துக் கழகங்களில் பல்வேறு பிரச்சினைகள் உள்ள நிலையில் தற்போது பண்டிகையின்போது தனியார் பேருந்துகளை இயக்கும் அரசின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. இது தொடர்பாக விவாதிக்க அனைத்து தொழிற்சங்கத்தினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. உரிய அவகாசம் இல்லாததால் வேறு தேதியில் கூட்டத்தை நடத்தும்படி தொமுச உள்ளிட்ட சங்கங்கள் தெரிவித்திருந்தன. அதனடிப்படையில் அடுத்த கூட்டத்தை நவம்பர் 12-ம் தேதி நடத்துவது என முடிவு செய்யப்பட்டது” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.