CSK: கிரீன் சிக்னல் கொடுத்த தோனி – அடுத்த 2 வருஷம் அதிரடி உறுதி – ரெடியாகும் சிஎஸ்கே

IPL 2025 Mega Auction: ஐபிஎல் தொடர் என்றாலே அனைவருக்கும் ஆர்வமும், உற்சாகமும் பிறந்துவிடும். தற்போது இளைஞர்களாக இருக்கும் பெரும்பாலனோரின் பள்ளி பருவத்தில் கோடை காலம் முழுவதையும் ஐபிஎல் தொடர்தான் நிச்சயம் ஆக்கிரமித்திருக்கும். காலை எழுந்தது முதல் இரவு வரை கிரிக்கெட் குறித்த பேச்சுகளும், போட்டிகளும் ஓய்வில் இல்லாமல் இருந்து கொண்டே இருக்கும். 

அந்த வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி கொண்டே இருக்கும். இந்தாண்டு 2025 சீசனில் மெகா ஏலம் நடைபெற இருக்கிறது. இந்த மெகா ஏலத்தை முன்னிட்டு ஒரு அணி 6 வீரர்கள் வரை தக்கவைக்கலாம். 6 பேரில் ஒரு அணி மூன்று பேரை ஏலத்திற்கு முன் தக்கவைக்கிறது என்றால் மீதம் உள்ள 3 பேரை ஏலத்தில் RTM மூலமாக தக்கவைக்கலாம். இதில் அதிகபட்சமாக 5 Capped வீரர்களை தக்கவைக்கலாம் மட்டும் குறைந்தபட்சம் 1 Uncapped வீரரை தக்கவைக்க வேண்டும். 

Uncapped தோனி

இதில் தற்போது Uncapped வீரருக்கான பழைய விதி ஒன்று மீண்டும் ஒரு சின்னஞ்சிறிய மாற்றத்துடன் ஏலத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது, இந்திய அணி கடைசியாக பிளேயிங் லெவனில் விளையாடி 5 ஆண்டுகள் நிறைவடைந்திருந்தால் அவர்கள் Uncapped வீரர்களாக விளையாடலாம். முன்னர், 5 ஆண்டுகளுக்கு முன்னர் ஓய்வுபெற்றவர்கள் மட்டுமே இந்த கணக்கில் வருவார்கள். 

உதாரணத்திற்கு தோனி (MS Dhoni) 2019ஆம் ஆண்டில்தான் கடைசியாக இந்திய அணி இடம்பெற்றார், 2015இல்தான் ஓய்வை அறிவித்தார். புதிய விதியின்படி தற்போது தோனி Uncapped வீரராக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படலாம். எனவே இவரை 4 கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே தக்கவைக்கலாம். மற்ற பெரிய வீரர்களை ஏலத்தில் எடுக்க பணமும் கையில் இருக்கும். 

சிக்னல் கொடுத்த தோனி

இந்நிலையில், தோனி இந்த சீசனில் விளையாடுவாரா மாட்டாரா என்ற கேள்வி எழுந்துகொண்டே இருந்தது. வரும் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் 10 அணிகளும் தங்களின் தக்கவைப்பு வீரர்கள் பட்டியலை அறிவிக்க வேண்டும். எனவே, தோனி அதற்குள் தனது முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அதிலும் அக். 29, 30 ஆகிய தேதிகளில் சிஎஸ்கே (Chennai Super Kings) அணியை தோனி சந்திக்க இருப்பதாக கூறப்பட்டது. அந்த சந்திப்பின்போதுதான் தோனி தனது முடிவை அறிவிக்க இருந்ததாகவும் கூறப்பட்டது. 

ஆனால் தோனி தற்போதே தனது முடிவை பொதுவெளியில் அறிவித்துவிட்டார் எனலாம். ஒரு விளம்பர நிகழ்வில் தோனி சமீபத்தில் பேசியபோது,”எனது கடைசி சில வருட கிரிக்கெட்டை முடிந்தளவு கொண்டாட்டத்துடன் விளையாட நினைக்கிறேன். 9 மாதங்களுக்கு நான் என்னை உடற்தகுதியுடன் வைத்துக்கொள்ள வேண்டும். அதன்மூலம் இரண்டரை மாதங்கள் நான் ஐபிஎல் தொடரில் நன்றாக விளையாடலாம். இதுகுறித்து நான் முடிவெடுக்க வேண்டும், இருப்பினும் நிதானமும் வேண்டும்.

நான்கு 15, 20, 25 நாள்கள் பயிற்சி எடுப்பேன். அடுத்து 15-20 நாள்கள் விடுமுறையில் இருப்பேன். நான் விரும்பும் உணவை நான் சாப்பிட வேண்டும். நான் பயிற்சியை தொடங்கினால் நல்ல உணவுகளை உட்கொள்வேன். நான் விளையாடும் போது, ​​குறைவாகவே போட்டிகளை பார்ப்பேன், ஆனால் இப்போது சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாததால், ஒவ்வொரு ஆட்டத்தையும் ஆர்வத்துடன் பார்க்கிறேன். ஒரு பார்வையாளனாக என் இதயத்துடிப்பு அதிகரிக்கிறது. நான் களத்தில் இருக்கும்போது, ​​என் இதயத் துடிப்பு அப்படி இருக்காது, ஆனால் ஒரு ரசிகனாக, அது வித்தியாசமானதுதான்” என்றார். எனவே இதன்மூலம் தோனி வரும் 2025 சீசனில் விளையாடுவார் என கூறப்படுகிறது.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.