‘எல்லை தாண்டிய ஊடுருவலை நிறுத்தினால் தான் மே.வங்கத்தில் அமைதி திரும்பும்’ – அமித் ஷா

பெர்டாபோல் (மேற்குவங்கம்): வங்கதேசத்தில் இருந்து வரும் ஊடுருவலைத் தடுத்து நிறுத்தினால்தான் மேற்குவங்கத்தில் அமைதியை நிலைநாட்ட முடியும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மேலும் 2026-ல் மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் அண்டை நாட்டில் இருந்து சட்டவிரோதமான குடியேற்றம் நிறுத்தப்படும் என்றார்.

மேற்கு வங்கத்தில் இந்திய வங்கதேச எல்லைப் பகுதியில் பெர்டாபோலில் உள்ள சோதனைச் சாவடியில் (Land port) புதிய பயணிகள் மற்றும் சரக்கு முனையத்தை உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைத்தார். அப்போது பேசிய அமித் ஷா திரிணமூல் காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார். 2026-ம் ஆண்டில் மாநிலத்தில் அரசியல் மாற்றத்துக்கு வழிவகுக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

உள்துறை அமைச்சர் கூறுகையில், “இந்த பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டுவதில் இந்தச் சோதனைச் சாவடிகள் முக்கிய பங்காற்றுகின்றன. எல்லைப் பகுதியில் சட்டரீதியாக உலவமுடியாத போது சட்டவிரோத ஊடுருவல் அதிகமாகிறது. இது நாட்டின் அமைதியை பாதிக்கிறது.

2026- ல் மாற்றத்தை ஏற்படுத்துமாறு நான் மேற்குவங்க மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். பின்பு ஊடுருவல் நிறுத்தப்பட்டு அமைதி தானாக வரும். அண்டை நாட்டில் இருந்து ஊடுருவல் நிறுத்தப்பட்டால் மட்டுமே மேற்கு வங்கத்தில் அமைதி திரும்பும்.

இரண்டு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை, இணைப்பை மேம்படுத்துவதில் சோதனைச் சாவடிகள் முக்கிய பங்காற்றுகின்றன. அவை இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவுகளையும் மேம்படுத்துகின்றன. இவ்வாறு அமித் ஷா பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.