Dhoni: `இன்னும் சில ஆண்டுகள்..!' – IPL-ல் குறித்து தோனி சிக்னல்… CSK CEO கொடுத்த ரியாக்சன்!

தோனியின் கடைசி ஐ.பி.எஸ் சீசன் இதுவாகத்தான் இருக்கும் என்று இந்தாண்டு ஐ.பி.எல்லில் அவரின் ரசிகர்கள் தங்களின் பெரும் ஆதரவையும், ஆரவாரத்தையும் வெளிப்படுத்தினர். மேலும், சேப்பாக்கம் மைதானத்தில் ஐ.பி.எல் கோப்பையை வென்று சாம்பியனாக தோனி விடைபெற வேண்டும் என்றும் ரசிகர்கள் விரும்பினர். ஆனால், சி.எஸ்.கே அணி பிளே-ஆஃப் சுற்றுக்குக்கூட முன்னேறாததால் இன்னொரு சீசன் 2025-ல் தோனி ஆடுவாரா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டனர்.

தோனி

அதிலும், அடுத்தாண்டு ஐ.பி.எல் தொடருக்கான ஏலத்துக்கு, அக்டோபர் 31-க்குள் ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்கவைக்க விரும்பும் 6 வீரர்களின் பட்டியலை வெளியிடவேண்டும் என்று ஐ.பி.எல் நிர்வாகம் தெரிவித்த நாள்முதல் தோனியை சென்னை அணி தக்கவைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தொற்றிக்கொண்டது.

காசி விஸ்வநாதன், தோனி

மறுபக்கம், சென்னை அணியின் CEO காசி விஸ்வநாதன், “தோனி விளையாட வேண்டும் என்றுதான் நாங்களும் எதிர்பார்க்கிறோம். ஆனால், அவர் தன்னுடைய முடிவைப் பற்றி இன்னும் தெரிவிக்கவில்லை. அக்டோபர் 31-வரை நாள் இருக்கிறது அதற்குள் நிச்சயம் சொல்வார்” என்று சமீபத்தில் கூறியிருந்தார்.

இந்த நிலையில், அடுத்தாண்டு ஐ.பி.எல்லில் தான் விளையாடுவது குறித்து தோனி சிக்னல் கொடுத்திருக்கிறார். தனியார் ஊடக நிகழ்ச்சியொன்றில் அடுத்தாண்டு ஐ.பி.எல்லில் விளையாடுவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த தோனி, “கடந்த சில ஆண்டுகளாக என்னால் விளையாட முடிந்த கிரிக்கெட்டை, தற்போது நான் மகிழ்ச்சியாக விளையாட விரும்புகிறேன். கிரிக்கெட் போன்ற தொழில்முறை விளையாட்டை நீங்கள் விளையாடும்போது அதனை சாதாரண விளையாட்டாக எடுத்துக்கொள்வது கடினம். நெகிழ்ச்சியான உணர்ச்சிகள் வருகின்றன, அர்ப்பணிப்புகளும் இருக்கின்றன.

தோனி

அடுத்த சில ஆண்டுகள் இந்த விளையாட்டை மகிழ்ச்சியாக விளையாட விரும்புகிறேன். ஒன்பது மாதங்கள் என்னை நான் உடற்தகுதியுடன் வைத்திருந்தால், இரண்டரை மாதம் நான் ஐ.பி.எல் விளையாட முடியும். அதற்கு நீங்கள் திட்டமிட வேண்டும். அதேசமயம் நீங்கள் கூலாகவும் இருக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

இவரைத் தொடர்ந்து ஸ்போர்ட்ஸ் ஊடகமொன்றில் பேசிய சென்னை அணியின் CEO காசி விஸ்வநாதன், “அவர் தயாராக இருக்கும்போது, ​​எங்களுக்கு வேறென்ன வேண்டும். நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

தோனி அடுத்தாண்டு ஐ.பி.எல் விளையாடும்பட்சத்தில், சென்னை அணி தக்கவைக்கும் வீரர்கள் பற்றிய உங்களின் கருத்தைக் கமென்டில் பதிவிடுங்கள்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.